என் மேகம் ???

Wednesday, January 26, 2011

ஆமை நடை செல்ல ஆசையா?

இன்று காலை பீச்சில் நடந்து கொண்டிருக்கும் பொழுது கவனித்தோம், இரண்டு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்து கிடந்தன. "Olive Ridley Turtles" ஆகத்தான் இருக்க வேண்டும். வலையில் சிக்கி இருக்கலாம். இதுவரை இரண்டு முறை ”turtle walk" சென்றுள்ளோம். அந்த அனுபவமும், ஆலிவ்ரிட்லி கடலாமைகள் பற்றியுமே இப்பதிவு.

”பங்குனி ஆமை” என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இவை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையுள்ள காலங்களில் முட்டையிட கரைக்கு வரும். ”ஆலிவ் பச்சை” நிறத்தில் இருப்பதால் “ஆலிவ் ரிட்லி” ஆமைகள் என்றழைக்கப்படுகின்றன. இவை கடலாமைகளிலேயே சிறியவை; இரண்டரை அடி நீளம் மற்றும் அகலம். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை முட்டையிடும். ஒவ்வொருமுறையும் சராசரியாக 100 முட்டைகள் இடும்.

இந்த கடலாமைகளின் முக்கியமான ஆபத்துகள்:
- trawlers எனப்படும் மீன்பிடி கப்பலகள்; கிடைப்பதை வலையில் இழுத்துவிடும்... ஆமையையும் சேர்த்து
- ஆமை முட்டைகளை உண்ண எடுத்துச் சென்றுவிடுவார்கள்
- முட்டைவிட்டு வெளிவரும் ஆமைக்குஞ்சுகள், வழக்கமாக நிலா, நட்சத்திர ஓளியில் கடல் நோக்கி செல்லும். ஆனால், இப்பொழுது கரையில் பளீரென இருக்கும் விளக்குகளை நோக்கி நகரும். 24 மணி நேரத்திற்குள் கடலுள் சென்றால் மட்டுமே அதனால் தாக்கு பிடிக்க முடியும்.. கரை நோக்கி வரும் ஆமைகள் சூரிய ஒளியால் dehydrate ஆகி இறக்கலாம், நாய் (அ) பூனைகளால் உண்ணப்படலாம்.
- இவற்றைக் கடந்து கடலுள் செல்லும் ஆமைக்குஞ்சுகளில் ஆயிரத்தில் ஒன்று மட்டுமே உயிர் பிழைக்கும்

(தகவல்கள் நன்றி : http://sstcn.org/)


ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்களில், இரவில் கடலோரம் நடந்து, ஆமைமுட்டைகளை எடுத்து பத்திரமாக hatchery-ல் வைத்து கடலில் விடுவர் “SSTCN” என்ற சேவை அமைப்பினர். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்களில் வெள்ளி சனிக்கிழமைகளில், நீலாங்கரை தொடங்கி பெசண்ட் நகர் வரை சுமார் 7 கி.மீ மக்களிடையே இதைப் பற்றிய விழிப்புணர்வுக்காக வெள்ளி, சனிக்கிழமைகளில் மக்களுடன் சேர்ந்து இப்பணி எவ்வித கட்டணமும் இன்றி நடக்கும்.

கிட்டதட்ட நள்ளிரவில் கும்பலாக பீச்சில் நடப்போம். மீனவர்களின் கட்டுமரங்களையோ, வலையையோ தொடாமல் செல்ல வேண்டும். முன்னால் SSTCN அமைப்பினர் சென்று ஆமை எதுவும் வருகிறதா (அ) இருக்கிறதா என்று கவனிப்பார்கள். ஆமை வருகிறது என்றால், எங்களைக் காத்திருக்கச் சொல்வர். ஆமை முட்டையிட ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டும். முட்டை இடும் முன் அது ஏதேனும் ஃபீல் செய்தால் மீண்டும் கடல் நோக்கி சென்றுவிடும். ஆனால் முட்டையிட ஆரம்பித்தால் என்ன நடந்தாலும் அசையாது. எனவே முட்டையிட ஆரம்பித்த உடன் நாம் சென்று பார்க்கலாம்.




சென்றமுறை அப்படிதான் ஆமையைக் கண்டோம். ப்ளாஷ் கூடாது என்று அவர்கள் எவ்வளவோ கூறியும், ஆமை முட்டை இடுவதை ப்ளாஷில் குளிப்பாட்டி விட்டனர் நம்மக்கள். பாவம் அந்த ஜீவன் என்ன திட்டு திட்டியதோ? அழகாக டென்னிஸ் பந்து சைஸில் இருந்தன முட்டைகள். சுமார் 100 முட்டை இட வேண்டிய ஆழத்திற்கு குழி தோண்டி இருந்தது. முட்டை குழியில் இருக்கும் தட்பவெட்பம் பொறுத்து ஆணாகவோ பெண்ணாகவோ உருவாகும். அந்த குழியின் நீளம், அகலம், தட்பவெட்பம் குறித்துக் கொண்டு SSTCN அமைப்பினர் அம்முட்டைகளை hatchery-க்கு எடுத்துச் செல்ல, சாலையில் காத்திருக்கும் அவர்கள வேனுக்கு கொடுத்து விடுவர். 45-60 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் கடலில் விட்டுவிடுவார்கள். 12 (அ) 13 வருடங்கள் கழித்து மீண்டும் பிறந்த கரைக்கே முட்டையிட வருமாம். கிட்டதட்ட ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கு வந்து முட்டையிடுகின்றன ஆமைகள். ஒரிஸாவிற்கும் நிறைய செல்லுமாம்.





ஆமை தோண்டும் குழி ஆழமாக இருந்தாலும் முட்டை உடையாது. ஏனெனில், முட்டை இடப்படும் பொழுது இரப்பர் பந்து மென்மையாக இருக்கும். முட்டை ஓடு சில விநாடிகள் கடந்தே கடினமாகும். ஆமை வந்து சென்ற தடமிருந்தால், முட்டை இட்டுள்ளதா எனத் தேடி அறிந்து, அம்முட்டைகளையும் பத்திரமாக hatchery-ல் சேர்த்து விடுவர்.

மேலும் விவரங்களுக்கு ”http://sstcn.org/” செல்லவும். சென்னையில் ஆமைநடை பற்றிய விவரங்களும் உண்டு.

மேலும் படங்களுக்கு இங்கே செல்லவும்
http://sstcn.org/gallery/

இயற்கையின் அதிசயங்களை சிறுவர்களுக்குப் புகட்ட ஒரு நல்ல வழி... என்ன கொஞ்சம் நடக்க வேண்டும் (ECR சாலையில் ஷேர் ஆட்டோ இருப்பதால், நடுவில் கூட ஒரு ஆமை கண்ட பின் பிரிந்து வந்துவிடலாம்; முழு 7 கிமீ நடக்க வேண்டாம்... ஆனால் அதற்குள் ஆமையோ முட்டையோ கண்ணில் பட வேண்டும்)

Friday, January 21, 2011

குறிப்புகள்

விலைவாசி உயர்வு... சோற்றுடன் ஒரு காய்/குழம்பு வைத்து சாப்பிடுவது கூட ஆடம்பரம் ஆகிவிட்டது. ஒவ்வொரு முறை விலைவாசி பற்றி எண்ணும் பொழுதும் மனதில் லஷ்மியும் கோமதியும் வந்து செல்வார்கள்.

குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு பெற்றோர் மெனக்கெடுவதை இப்பொழுது அவர்கள் வைக்கும் விதம் விதமான பெயர்களில் இருந்தே காணலாம். பெற்றோர் குழந்தைகளுக்கு அப்பழுக்கற்ற பெயர்களையே வைக்கிறார்கள்; குழந்தைக்கு பெயர் போலவே நல்ல எதிர்காலம் அமையாதோ என்ற ஏக்கமும் இருக்கும். எல்லா பெயர்களும் நல்ல பெயர்களே; மனிதர்கள் தான் பெயர்களை அழுக்காக்குவார்கள். சரி விடுங்கள்... எதற்கு சொன்னேன் என்றால் நமக்கு தான் லஷ்மி கடாட்சம் இல்லையே, பெண்ணுக்கேனும் இருக்கட்டும் என்று “லஷ்மி” என்ற பெயர் வைத்திருப்பார்களோ? ஆனால் லஷ்மிக்கு லஷ்மி கடாட்சம் படவில்லை.

லஷ்மிக்கு சிரித்த முகமெல்லாம் கிடையாது; என்றாலும் சிடுமூஞ்சி அல்ல. ஏதோ... அப்படி இப்படி கஷ்டப்பட்டு பள்ளி இறுதிவரை தேற்றினார்கள். அப்பாவும் போய் சேர்ந்துவிட, வேலைக்கு செல்லும் தேவை லஷ்மிக்கு இருந்தது. தட்டெழுத்தில் தேறி ஆயிரத்து சொச்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அம்மாவுக்கு உடல் நலம் அவ்வளவு சரி இல்லை. வாடகை, பால், காய், கரண்ட் என்று எல்லா செலவும் சமாளிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் அங்கே இங்கே தேடி அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு, இவர் ஹாஸ்டலில் சேர்ந்து விட்டார். மாதம் எண்ணூறு ரூபாயில் ஹாஸ்டல் செலவுகள் அடங்கிவிட, முதியோர் இல்லம், போக்குவரத்து செலவு என்று சரியாகப் போய்விடும். அம்மாவை அருகில் இருந்து கவனிக்க ஆசையிருந்தும் இயலாமல் சிரிப்பைத் தொலைத்த முகம்.

கோமதி... லஷ்மிக்கு நேர் எதிர். கோமதிக்கு நாற்பதை ஒட்டி இருக்கும் வயது. முகத்தில் பவுடரும், லிப்ஸ்டிக்கும் , ஓங்கி ஒலிக்கும் குரலும், “ஹா..ஹா” என்ற சிரிப்பும், முதலில் பகட்டான ஆள் என்றுதான் தோன்றும். முகப்பூச்சுக்கும் பின்னால் இருக்கும் பற்பல பிரச்னைகள். பெரிய பிரச்னைகள் உள்ளவர்கள் முகத்தில் புன்னகையை அணிந்து கொள்வதும், சின்ன சின்ன பிரச்னைகள் உள்ளவர்கள் கப்பல் கவிழ்ந்த முகத்துடன் வளைய வருவதும் வாழ்க்கையின் சுவாரசியங்கள் தானே?

கோமதி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவரது இளமையில் வேற்று சாதியில் ஒருவரை மணம்புரிந்து வீட்டை விட்டு வெளியேறியவர். ஆணொன்றும் பெண்ணொன்றும் தந்த பின் கடமை முடிந்ததாய் கணவன் கைகழுவிவிட்டு ஓடிப்போனான். தோள் கொடுக்க யாருமின்றி தவித்தார். கிடைத்த வேலை, வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக இல்லை. இதில் பிள்ளைகளை எங்கே படிக்க வைக்க... அவர் தேடியது, குழந்தைகள் காப்பகம். மகனும் மகளும் காப்பகத்தில் வளர, இவர் ஹாஸ்டலில் காலம் தள்ளினார். மனம் நிறைய பாசம் இருந்தும், கையில் பசை இல்லாததால் பிள்ளைகளை உடன் வைத்துக்கொள்ள இயலவில்லை. மகளுக்கு தாய் தன்னை அனாதையாக்கிவிட்டதாகக் கோபம். மகன், புரிந்து கொண்டான். எப்படியோ அவனுக்கும் வேலை கிடைத்தது. சீக்கிரமே வீடு பிடித்து பிள்ளைகளுடன் செல்லப் போவதைச் சொல்லிக்கொண்டிருந்தார். மகளின் கோபம் தீரவில்லை என்றார். காலம் நிச்சயம் அவளுக்கு அந்த தாயின் வேதனையைப் புரிய வைக்கும்.

இவையெல்லாம் கிட்டதட்ட 15 வருடத்திற்கு முந்தைய கதை. காலம் ஓடினாலும், மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகள் கூடுகிறதே ஒழிய எதுவும் மறைவதாகத் தெரியவில்லை. விலைவாசி உயர்வு அன்றாட வாழ்க்கையை மட்டும் போராட்டம் ஆக்குவதில்லை, சிலரின் வாழ்க்கையைப் போர்க்களம் ஆக்குகிறது. என்று விடியும் இது போன்ற மக்களுக்கு? என்றாலும்... போராட்டமான வாழ்க்கையைத் தளராது போராடிக்கொண்டே செலுத்தும் கோமதி, லஷ்மியின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்


துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்….
பூக்கள் மலரும்
- ஐஸா

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு

Thursday, January 20, 2011

என்னைப் பெற்ற மகளே!!!

பிறந்த நாள் வரும்
அவளுக்கு முன்னும்
எனக்கு அதன் பின்னும்

என்னைவிட சின்னவள் நீ
கன்னம் குழிய
சிரிக்கிறாள் மகள்

அன்பு பொழிந்து
அணைத்துக் கொள்ளும்
கோபம் மறந்து
கட்டிக் கொள்ளும்

கள்ளமற்ற உன்
குழந்தை மனம் முன்
சிறுத்து நிற்கும்
என் மனம்

நீ பிறந்த பின்தான்
மீண்டும் பிறந்தேன்
வாழவும் கற்கிறேன்
நான் சின்னவள்தான்...

என்னைப் பெற்ற மகளே!!!

Monday, January 17, 2011

மாயை

மனிதனின் வாழ்க்கை
இறைவனின் ஒருகணம்
மாயை பேசும்
கதைகள் புரிவதில்லை

சிறியவர்களின் சச்சரவுகள்
சில நொடிகளே நீடிக்க
பெரியவர்களின் சச்சரவுகள்
வருடங்கள் ஓடியும் தீராதது

சில நேரங்களில்
மாயை போல் தான்
மருள்விக்கிறது...

Wednesday, January 12, 2011

குறிப்புகள்

எம்.எஸ் அப்படி தான் அவரை அழைப்போம். நடுத்தரம் தாண்டிய வயது. பொதுவாக அவரது உலகமே தனி. எப்பொழுதும் ரேடியோவும் கையுமாக சில சமயங்களில் அதனுடன் பாடிக்கொண்டு.... யாருடனாவது பேசிப் பார்ப்பது சற்று அபூர்வம்.

பழகப் பழகத்தானே வாழ்க்கை தெரியும். அவர் நல்ல அழகு கூட. இனிமையான குரல். ரேடியோ சத்தமோ இனிமையான பாட்டு சத்தமோ கேட்டால் அது நிச்சயமாக எம்.எஸ் தான். ஆனால் குழந்தை செல்வம் இல்லை என்று விலக்கி வைத்து விட்டாராம் கணவர்.

கையில் வேலை இருந்தது. பிறகென்ன? ஹாஸ்டல் வாசம். குருவி போல் காசு சேர்த்து சொந்த ஊரில் வீடு கட்டிக் கொண்டார். “எனக்கென்னங்க... ரிடையர் ஆனால் சொந்த வீட்டுக்குப் போய்டுவேன்; அக்கா பசங்க பார்த்துக்குவாங்க... சும்மாவா இருக்கப் போறேன்...என்னால் முடிஞ்சதை நானும் செய்வேன்”, நம்பிக்கையுடன் பேசும் பொழுது பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.

இவர் மட்டுமா? தன்னம்பிக்கை என்றால் வித்யா தான். பார்த்தால் ஒரு குறையும் தெரியாது. என்ன ரொம்ப நேரமா பேசாமல் சிரிச்சிகிட்டே இருக்காங்களேனு பார்த்தால் தான் புரியும்... அவர் உதட்டசைவில் நம்முடைய பேச்சை கேட்கிறார் என. நன்கு படித்து நல்லதோர் வேலையில் இருக்கும் அவருக்கு, ரோஜாப்பூக்கள் போல் இரு குழந்தைகள். ஆனால் அவரது குறையைக் காரணம் காட்டி விலக்கி வைத்திருந்தார். எத்தனை குமுறல்களோ அந்த இதயத்தில்... என்றாலும் எப்பொழுதும் சிரித்த முகம் தான். நிச்சயம் புன்னகையின் ஒரு பகுதி பொருளாதார சுதந்திரம் தந்த தன்னம்பிக்கை தான்.

இன்றும் பலர், கல்யாணம் செய்து குடித்தனம் பண்ணும் பெண்ணுக்கு எதற்கு வேலை என்று கேட்கிறார்கள்? ஆனால், இப்படி கணவனால் கைவிடப்படுபவர்களும் , வாழ்வின் சிக்கல்களில் சிக்கிக் கொள்பவ்ர்களுக்கும் பொருளாதார சுதந்திரம் மட்டுமே தன்னம்பிக்கையும், நல்லதோர் வழியைக் காட்டும். எத்தனையோ வீட்டில் ஆணுக்குப்பின் பெண்ணால் தான் வீடு நிற்கும் என்ற நிலையில் முதலில் இருந்து முயற்சித்து கால் ஊன்றுவதற்குள் ஒரு போராட்டமே தேவைப்படும். ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை.

நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின் செல்வாக்குதான்
- மெர்ஸன்
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு
- லெனின்

Monday, January 10, 2011

பொன்மொழிகள்

சமீபத்தில் என் கவனத்திற்கு வந்து பிடித்த பொன்மொழிகள் சில...

Don't let the littleness in others bring out the littleness in you.
மற்றவரின் சிறுமைத்தனம் உங்களுக்குள் இருக்கும் சிறுமைத்தனத்தை வெளிக்கொணர அனுமதிக்காதீர்கள்

Giving up doesn't always mean you are weak; sometimes it means that you are
strong enough to let go
விட்டுக்கொடுத்தல் பலவீனத்தின் அறிகுறி அல்ல; சிலவேளைகளில் விட்டுக்கொடுத்தல் உங்கள் வலிமையைக் குறிக்கும்

It takes years to build up trust, and only seconds to destroy it
நம்பிக்கையை உருவாக்க பல வருடங்கள் ஆகலாம்; ஆனால் சில நொடிகளில் அதைத் தகர்த்துவிடலாம்

Trust is like a vase.. once it's broken, though you can fix it the vase will never be same again.
நம்பிக்கை என்பது ஜாடி போன்றது; உடைந்த பின் ஒட்டி வைக்கலாம் ; ஆனால் முன்பு போல் இருக்காது

Don't let anybody walk through your mind with dirty feet
யாரையும் உங்கள் மனதுள் அழுக்குடன் வர அனுமதிக்காதீர்கள்

Thursday, January 6, 2011

ஊரில் வீடு

சொல்லிக்கொண்டு தான் கிளம்புவோம்
கலகலக்கும் பேச்சுக்கிடையே
இன்னும் தங்கல் நீளாதா என
உறவுகள் கையசைக்க
அடுத்த பயணம் எப்பொழுதென
கேள்விகளுக்கு பதிலாக
விடுமுறை தினங்களையும்
பயண ஆயத்தங்களையும்
தேடிக் குறிக்கும் மனம்....

சொல்லிக்கொள்ளாமல் கிளம்பும்
வேளையும் வந்து சென்றது
காலத்தின் கட்டாயம்
நினைவுகளால் நிரப்பப்பட்டு
மெளனத்தால் பூட்டப்பட்டு
தனிமையில் விடப்பட்டது வீடு...
உறவாடி சென்ற இடம்
இன்று மாறியது
இளைப்பாறிச் செல்ல...

சொல்லிக்கொள்ள யாருமின்றி
நினைவுகளைத் தூண்டிவிட்டு
கிரீச்சிடும் கதவாக
ஒலிக்கும் வீட்டின் குரல்
அடுத்த பயணம் எப்பொழுதென...
மீண்டும் வரும் காரணம்
என்னவாக இருக்குமென
தேடலுடன் பூட்டப்படுகிறது
ஊரில் வீடு....

Sunday, January 2, 2011

கூர்க்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கிருஸ்துமஸ் & புத்தாண்டை ஒட்டி ”ஆணியே பிடுங்க வேண்டாம்” என்று ஆபீசில் ஒரு வாரம் லீவு. எனவே “கூர்க்” பயணம். இந்த முறை சாத்தூரில் இருந்து மைசூர் எக்ஸ்ப்ரஸில் பயணம். சில நாட்களுக்கு முன் தான் ட்ரெயின்கள் கரெக்டான நேரத்திற்கு சென்றுவிடுவது குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அதனாலோ என்னவோ 10 மணிக்கு மைசூர் செல்ல வேண்டியது 2 மணிக்கு எங்களை மைசூரில் இறக்கி விட்டது. அங்கிருந்து டவேராவில் கூர்க்கை நோக்கித் தொடங்கியது பயணம். குளிர் எல்லாம் இல்லை. வழி முழுக்க விதவிதமான பயிர்களைக் காண முடிந்தது. முதலில் குவியலாக அவரை, இஞ்சி பார்த்தோம். பின்னர் யூக்கலிப்டஸ், வாழை, பாக்கு. காபி & மிளகு என்று மாறி மாறிக் காண முடிந்தது. ஆங்காங்கே காய்ந்த மூங்கில்கள் வளைந்து காணப்பட்டன. யானை வளைத்ததாம். 25-30 வருடங்கள் ஆனால் மூங்கிலில் அரிசி வந்து காய்ந்து விடும் என்றார் டிரைவ்ர்.


தேயிலை மலர்

மிளகு

காபி பழங்கள்


பாக்கு


தேயிலை தோட்டம்

முடிவாக தேயிலைத் தோட்டம். அங்கு தான் எங்கள் தங்குவதற்கான இடம் இருந்தது.
மிக அழகான வியூ. காற்றாடி இன்றி படுத்தாலும் நடு இரவில் கொஞ்சம் வியர்ப்பது போல் இருந்தது. அதிகாலை இலேசான குளிர் இருந்தது. சைக்கிள் ஓட்டாமலே எங்களை கீழே இழுத்துச் சென்றது. எவ்வளவு மிதித்தாலும் மேலேறுவது மிகக் கஷ்டமாக இருந்தது.

இயற்கையின் வலைதளம்



முதல் நாள் “இர்ப்பு அருவி” சென்றோம். சில்லென்று அருவி கொட்டியது. ”மலபார் பீக்காக்” என்ற பட்டாம் பூச்சி இங்கு காணப்படுகிறது. சோவென்று கொட்டும் அருவிமுன் தொட்டு தொட்டு விளையாடிய பட்டுப்பூச்சிகள் கொள்ளை அழகு.

இர்ப்பு அருவி


மலபார் பீக்காக்



அதன் பின் நாங்கள் சென்றது நாகர்ஹோல் சரணாலயம். போகும் வழியில் மான்கள் காண முடிந்தது. 2:30 முதல் சபாரி தொடங்குகிறது. மாலை 5 மணி வரை மணிக்கொருமுறை இருக்குமாம். 30 பேர் செல்லக்கூடிய வேனில் கேமிராவுடன் ஏறினோம். மான்கள் நிறைய கூட்டமாகக் காண முடிந்தது. எல்லோரும் புலிக்காக ஆவலாக இருக்க, எங்கள் கண்ணில் பட்டவை மான்கள், மிலா, காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் யானை ஒன்று.

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க









நான் யாருனு தெரியுதா?



நாங்க தனியாவும் வருவோம்ல...



கூர்கைச் சுற்றி இருக்கும் சுற்றுலா தலங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கின்றன. எனவே, சரணாலயத்துடன் அன்று சுற்றல் முடிந்தது. மறு நாள் மட்டுமே இருந்தது. எனவே, தலைக்காவிரியை விட்டுவிட்டு (கிட்டதட்ட 200 கி.மீ என்றார்கள்) , “துபாரே” யானைகள் முகாம் சென்றோம். வழியில் காபித்தோட்டங்களை யானையிடம் இருந்து காக்க மின்வேலிகள் அமைத்திருப்பதைக் காண முடிந்தது. முகாம் 9:30க்கு தொடங்கி 12:00க்கு முடிந்து விடுமாம். யானைகள் குளிப்பது உண்பது எல்லாம் காணலாம். நாங்கள்: சென்றபொழுது 12:30. எனவே யானைகள் இல்லை; காவிரியில் “ராப்டிங்” என்று படகு பயணம் மட்டுமே செல்ல முடிந்தது. வெள்ள நேரங்களில் “வைட் வாட்டர் ராப்டிங்” இருக்குமாம். ஏழு கி,மீ வரை, காவிரியின் வெள்ளத்தில் ஜிவ்வென்று படகு பயணம் செய்யலாம். ஜீப்பில் தான் திரும்ப வேண்டுமாம்.


அடுத்து மைசூர் நோக்கி பயணம். வழியில் கூர்க் மக்கள் வெள்ளாடையுடன் செல்வதைக் கண்டோம். துக்கம் நேர்ந்தால் அவர்கள் உடுத்துவது வெள்ளுடையாம். மைசூர் செல்லும் வழியில் அடுத்து சென்றது திபத்தியன் மொனாஸ்ட்ரி என்ற புத்தர் கோயில். இது தான் முதல் முறையாக ஒரு புத்த கோவிலைக் காண்கிறேன். பிரும்மாண்டமாக சிலைகள். அழகான சூழ்நிலை. சுவரின் ஓவியங்களும் அழகு. சில ஓவியங்கள் காளியை நினைவுறுத்தின.

புத்த விகாரம்










மகளுக்கு தான் படித்ததை நேரில் கண்ட திருப்தி. காவேரி எக்ஸ்பிரசைப் பிடித்து புத்தாண்டை வரவேற்க சென்னை வந்தடைந்தோம்.