என் மேகம் ???

Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்




அதற்குள் ஒரு வருடமா என்று வேகமாக ஓடிவிட்டன நாட்கள்... குழந்தைகள் செய்யும் மாயம் தான் காலச்சக்கரத்தை மிக வேகமாக சுழற்றுகிறது. இரட்டை குதிரை சவாரி உற்றார் உதவியால் நன்கு செய்ய முடிந்தது. வாசிப்பில் பல நல்ல நூல்களைப் படிக்க முடிந்தது. நல்ல எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ள உதவும் பதிவுலகிற்கு நன்றிகள். தற்பொழுது “டாலர் தேசம்” படித்துக்கொண்டிருக்கிறேன். மனதை ஈர்க்கும் நடையுடன் லேசான நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கும் அமெரிக்க சரித்திரம், புத்தகத்தை கீழே வைக்க விடமாட்டேன் என்கிறது. இந்த வருடம் புத்தாண்டை புத்தகக்கண்காட்சியில் தொடங்கலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு இனியதொரு ஆண்டாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

Wednesday, December 30, 2009

மார்கழிப் பூவே!!!

வானிலை காரணமாக குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதிகாலை கடற்கரையைக் காண நேரம் அமைந்தது. பூசணிப்பூக்கள் அழகாக மலர்ந்ததைக் கண்டதும் நினைவு வந்தது , அன்று மார்கழி பிறக்கிறதென்று. ஒரு பூவைப் பறித்துக் கொண்டேன். முதல் நாளேனும் பூசணிப்பூவை வைத்துவிட வேண்டும் என்று மகிழ்வோடு எண்ணியபடி... இந்த மாதிரி வழக்கங்கள் சின்ன சின்ன மகிழ்ச்சி தருகின்றன அல்லவா?

மார்கழி என்றாலே சில ஆண்டுகளுக்கு முன்பே விட்டுவிட்டு வந்த கோவையின் பனிபடர்ந்த பொழுதுகள் மனதுள் வந்து போகும்... அது ஒரு காலம்... சென்னை என்பதே வெகு தொலைவு என்று எண்ணி வாழ்ந்த காலம். காலை நாலு மணிக்கு எழும் அம்மாவுடன் உடலுக்கு ஆகாதென்றாலும் எழுந்து தலை குளித்து, துண்டை தலையில் கட்டிக்கொண்டு தெருவில் கோலம் போட்ட காலம். வாசல் முற்றம் அடைக்க கோலம் வரைந்து... மார்கழி என்றால் நட்சத்திரக் கோலங்கள் தான் (அட!! வலையில் தேடினால் கிடைக்கவில்லை. அருங்கோண வடிவ கோலத்தின் பக்கங்களில் அதே போல் கூம்பாக வருமாறு இழுத்துவிட்டால் நட்சத்திர வடிவில் கிடைக்கும் கோலம் வாசல் அடைத்து மலரும்) . வெள்ளி என்றால் தவறாமல் கோலம் முடிந்தவுடன் பிள்ளையார் கோவில் தான். மார்கழி வெள்ளியில் மட்டுமே கிடைக்கும் கல்யாணி மாமியின் அந்த ருசியான அளவாகச் செய்யப்பட்ட பூரணக் கொழுக்கட்டைக்காக கோயில் விஜயம் தவற விடப்படாது.



வாசல் கூட்டி, சாணம் தெளித்து முதல் நாள் ஒரு பூ, அடுத்த நாள் இரண்டு என்று முப்பதாம் நாள் முப்பது பூக்களுக்கு நடக்கும் கதைகள் தனி. மார்கழி மாதம் முழுக்க பால்காரம்மாவுக்கு டிமாண்ட்தான். சாணம் எடுத்து வைக்க சொல்லி வீட்டுக்கு வீடு வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல், நீங்களே வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சென்றுவிடுவார். விட்டோமா பார் என்று சட்டியையும், முறத்தையும் தூக்கிக் கொண்டு மாட்டு கொட்டிலுக்கு முற்றுகை துவங்கும். அதுவும், இந்த போகியன்று... கிட்டதட்ட எல்லோரும் மாட்டு வால் அருகே நின்று கொண்டு அது திரும்பும் திசையெல்லாம் சென்று கொண்டிருப்போம். காலையில் சாணி கரைத்து தெளிக்கப்படும் நீரால் புறப்படும் மண்வாசனை சாணிப்பவுடர் வந்த பொழுதே குறைய ஆரம்பித்தது. சாணி மெழுகப்பட்டிருக்கும் வீட்டின் அழகே தனி.




அடுத்து பூக்கள்... எங்கள் குடியிருப்பில் தோட்டம் ஒன்று உண்டு. ஒரு காவலர் எங்கள் நண்பர் மற்றொருவர் உள்ளே விட மாட்டார். நண்பர் காவல் என்றால் அனுமதியுடன் உள்நுழைந்து ஆடி பாடி களித்து, செர்ரி பழங்கள் பறித்து உண்டபின் செம்பருத்தி செடியெல்லாம் மொட்டுக்கள் இன்றி மொட்டையடிக்கப்படும். வெள்ளை, சிவப்பு, ரோஸ், மஞ்சள் என்ற வண்ணங்களிலும் சாதா, அடுக்கு, மிளகாய் என்று வகைகளிலும் அவை எங்கள் நீர் தொட்டியில் மறு நாள் காலை மலர்ந்து, கோலத்தின் மேல் சாணத்துடன் சேர்ந்து அழகு சேர்க்கும். நண்பரல்லா காவல் என்றால், நைசாக உள்நுழைந்து வெற்றிகரமாக மொட்டுக்கள் பறிக்கப்பட்டு திட்டு வாங்கிக்கொண்டே தப்பித்து வீடு வருவோம்.

பூக்கள் என்றால் செம்பருத்தியும் பூசணிப்பூவும் மட்டும் தானா? ”டிசம்பர் பூக்கள்” என்று மணமற்ற அழகு பூக்கள். வெள்ளை, ரோஸ், வயலட், நீலம், மஞ்சள் என்று பூத்துக் குலுங்கும். புது நிறம் கண்டுவிட்டால் அதைப் பதியம் போட தேடி அலைவோம். நிறம் நிறமாக அப்பொழுது பிடித்த மலர்கள், ஏனோ இப்பொழுது விருப்பமில்லை. முல்லையும் மல்லியும் மட்டுமே சூடப் பிடிக்கின்றது.

நினைவுகள் மனதில் ஓட வீடு வந்தோம். கோலமின்றி வாசல் வெறிச்சென்றிருந்தது. கோலமிட ஆசையுடன் கோலப்பொடி எடுத்த பொழுது தான் “இன்னிக்கு அமாவாசை... கோலம் போடக்கூடாது” என்று குரல் கேட்டது. பூவை ஓரமாக வைத்து விட்டு மார்கழியை மறந்து பரபர வாழ்வில் ஐக்கியமானேன். சில பழக்க வழக்கங்கள் மகிழ்ச்சி தருகின்றன... சில பழக்க வழக்கங்கள் மகிழ்ச்சி தருவதில்லை...

Wednesday, December 23, 2009

மறக்க முடியுமா?

வாட்சும் மோதிரமும்


கொசுறு (ம்... வாட்ச் ஸ்ட்ராப் என்ன அழகு?)



மறக்கப்பட்ட அழியா நினைவுகள்

Thursday, December 17, 2009

கோலங்கள்



சில்லென்று மனம் குளிர
பனித்துளிகளில் துளிர்த்தது
புள்ளி கோலம்




இலைகளின் ஊடே
வெயில் போட்டது
கோட்டு கோலம்




பூக்கள் மலர்ந்து
மணத்தோடு தந்தது
வண்ணக் கோலம்




வானிலை மாற
மழை இட்டது
இழை கோலம்




மழைத்துளியின் தொடலில்
நீர் வரைந்தது
நெளி கோலம




எதுவும் ஈடாகவில்லை
குழந்தையின் அசைவுகள்
தீட்டிய கோலத்தின் முன்...



<படங்கள் இணையம்>

Wednesday, December 16, 2009

நண்டு வருது, நரி வருது...

குழந்தை பிறந்து வளரும் வரை ஒவ்வொரு வட்டாரத்திலும் சில பாடல்கள் உண்டு. கேட்க, பாட இனிமையான பாடல்கள் அவை. நான் கேட்ட சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன். சில பாடல்கள் மருவி இருக்கலாம். தவறு இருந்தால் திருத்துங்கள். உங்களுக்குத் தெரிந்ததும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*********************
பெயர் வைக்கும்பொழுது முறத்தில் (சொளவு என்பது வழக்கு) சேலை, வேஷ்டி வைத்து, குழந்தையைக் கிடத்தி இலேசாகப் புடைப்பார்கள். அப்பொழுது பாடும் பாடல்

சொளவு நிறையத் தந்தவரே
உலகு நிறைய தா!!!
(இதை உழவு நிறைய என்றும் சொல்கிறார்கள். எது என்று எனக்குத் தெரியவில்லை)

************************
சின்னக் குழந்தையில் இருந்து அதன் இரு கைகளை நாடியில் குவித்து, பின்பு விரிக்கும் இவ்விளையாட்டிற்குப் பாடல்

சொட்டை , சொடக்கு
சோத்துப்பானை டொமக்கு...

ஒவ்வொரு சொல்லுக்கும் நாடியில் கையைக் குவித்து வைக்க வேண்டும். "டொமக்கு" என்று உரக்கக் கூறிக் கையை நாடியிலிருந்து எடுத்து விரிக்கும் பொழுது குழந்தை சிரிக்கும்.
************************

கைகளைப் பூவாகப் பாவித்து விரித்து, கையை ஆட்டிப் பாட, பின் நம்மோடு சேர்ந்து குழந்தையும் பூ போல் கையை விரித்து சிரிக்கும்

மாம்பூ மகிழம்பூ
மாமா கொடுத்த
மல்லிகைப்பூ

தாம்பூ தாழம்பூ
தாத்தா கொடுத்த
தாமரைப்பூ

***************************

பேச்சு சொல்லிக் கொடுக்கையில்

முதலில் அஃகு, அங்கு...

பின் அத்தை என்று சொல்லிக் கொடுக்க...இடது கையை விரித்து வலது கை ஆட்காடி விரலால் இடது கையின் நடுவில் குத்தி குத்தி...

அத்தத்த நெய்யூத்து
பிஞ்சு கத்தரிக்காயாம்
இன்னும் கொஞ்சம் ஊத்து

**********************

கொஞ்சம் வளர்ந்த பின், கையைப் பிடிக்க சொல்லும் பாட்டு:

மாக்கொழுக்கட்டை
மஞ்சள் கொழுக்கட்டை
மாமியார் பிடித்த
மண் கொழுக்கட்டை
பிள்ளையார் பிடித்த
பிடி கொழுக்கட்டை

இதில், நம் கைவிரல்களை மடக்கி ஒவ்வொரு வரிக்கும் குழந்தையின் கைகளில் வைக்க வேண்டும். கடைசி வரிக்கு நம் கையைப் பிடிக்கச் சொல்லிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

***************************

மேலும் சில பாடல்கள்:
---------------------

பருப்பு கடை, பருப்பு கடை
இது சோறு, இது குழம்பு, இது கீரை, இது தயிர், இது பொரியல்
அம்மாக்கு கொஞ்சம், அப்பாக்கு கொஞ்சம்,
பாட்டிக்கு கொஞ்சம், தாத்தாக்கு கொஞ்சம்,
பாப்பாக்கு கொஞ்சம்

கழுவி கழுவி ஊத்து...
நண்டு வருது, நரி வருது...
நண்டு வருது, நரி வருது...
(கிச்சு கிச்சு மூட்டுதல்)


இந்த பாட்டுக்கு கற்பனை சேர்த்துட்டு சாய்ந்தாட வேண்டியதுதான்...
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
மணிவிளக்கே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு


கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய் போடலாம் கைவீசு

எத்தனை அழகான பாடல்கள்? குழந்தைகளும் இரசிக்க நாமும் இரசிக்க வாழ்க்கையை சுவாரசியமாக்கும் அழகான பாடல்கள்.

Wednesday, December 9, 2009

மொறு மொறு தோசை

மொறு மொறு தோசை பிடிக்காத குழந்தைகள் இருப்பரா என்று எனக்கு தோன்றியது நேற்று மொறு மொறு தோசை சுட்டு சுட்டு கை வலித்த பொழுது. (தோசை பிடித்தவர்கள் எல்லாம் குழந்தைகள் மாதிரியா என்று யாரும் கேள்வி கேட்கக்கூடாது). இரண்டு நிமிடத்தில் என்று விளம்பரப்படுத்தப்படுபவை எல்லாம் இந்த தோசைக்கு முன் நிற்காது.

உண்மையில் இட்லி தோசை கண்டுபிடித்தவர்களுக்கு மொறுமொறு என்று தோசை, மல்லிகைப் பூவாக இட்லி கொடுத்து வாழ்த்தவேண்டும். பெரும்பான்மையான பரபர குடும்பங்களின் சாப்பாடு இந்த இட்லி தோசை மாவில் தான் ஓடும். “அரிசி மாவு உளுந்து மாவு கலந்து சுட்ட தோசை” என்று சிம்பிளாக சொன்னாலும் அவ்வளவு எளிதல்ல மாவரைப்பது... க்ரைண்டரே அரைத்தாலும்...

என் சிறுவயதில் உளுந்தை ஊற வைத்து அதை களைந்து (ஒரு தோல் இல்லாமல் உளுந்து கழுவறத பார்க்கறதிலேயே பொழுது போயிடும்), அப்புறம் உரல்ல போட்டு ஆட்டுவாங்க. நான் பக்கத்தில் உட்கார்ந்து மாவைத் தள்ளி தள்ளி விடுவேன். இப்ப அப்படி இல்லை, உளுந்து ஒரு அரை மணிக்கு ஊற வச்சு க்ரைண்டர்ல போட்டு எடுத்தடலாம். தள்ளறதைத் தள்ளி தான் ஆகணும். "பட்டனை தட்டினா ரெண்டு இட்லியும்..." அப்படீனு வந்தாலும் யாராவது மாவை அரைக்கத்தானே வேணும்?

முதலில் உளுந்து அரிசி விகிதம் ஒன்றுக்கு மூன்றா நான்கா என்று தொடங்கி , உளுந்து பொங்க வேண்டும் (பாக்கெட் வாங்காதே, மளிகைகடையில் மூட்டையிலிருந்து வாங்கு என்ற அறிவுரையுடன் சில சமயம் இந்த டிப்ஸ் கேட்டதற்காக ஊரில் இருந்து உளுந்து சுமந்து வர வேண்டி இருக்கும்), முழு உளுந்து , சாப்பாட்டு அரிசி என்றால் இட்லி மென்மையாக இருக்கும் என்று அறிவுரைகளைப் பின்பற்றி, மாவைப் பதமா கரைக்காட்டி இட்லி வராது என்று பக்குவமாகக் கலக்கி உப்பு போட்டு புளிக்க வைத்தால், “ஒரு சில கைக்கு மாவு பொங்காது” என்ற கமெண்ட்டுக்கு மனம் பொங்கும். ஆனால் ஒரு வழியாக இந்த டெக்னிக் எல்லாம் கற்று மாவு ஆட்டி வைத்து விட்டால் டிபனுக்கு யோசிக்க வேண்டாம். இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று ஊற்றிக் கொண்டே இருக்கலாம் மாவு தீரும் வரை. தீரப்போகிற சமயத்தில் கூட ரவை, கோதுமை எல்லாம் சேர்த்து இரவா தோசை, கோதுமை தோசை என்று அவசரத்துக்கு கை கொடுக்கும் இட்லி தோசை மாவே மாவு. திடீர் விருந்தினர் வந்தாலும் கவலை இல்லை தோசை மாவு இருந்தால்...

இந்த தோசையில் தான் எவ்வளவு வெரைட்டி... புள்ளைங்களுக்கு அப்படியே கண்ணாடி மாதிரி தோசை சுட்டுக் கொடுத்தால், ஊத்தற கை வலிக்கும் வரை உள்ளே போய்கிட்டே இருக்கும். சில பெரியவங்க... இப்படி சாப்பிட்டால் உடம்புல ஒட்டுமா என்று சும்மா கிண்ணுனு சுடுவாங்க பாருங்க... ஒண்ணு சாப்பிட்டால் ஒரு நாளை ஓட்டிடலாம் ... என்ன ஒரு புள்ளையும் தொட்டு கூட பார்க்காது. இன்னும் சிலரு ஓலையாவும் இல்லாமல், ஊத்தப்பமாவும் இல்லாமல், மாவு ஊத்தி சுடறதெல்லாம் தோசை தான்னு கொடுப்பாங்க...ஏதோ ஒண்ணு வயத்துக்கு கிடைச்சா சரிதான்.

இந்த இட்லி ... அரைச்ச மாவுல மொத நாள் இட்லி நல்லா வரும். அதுக்கப்புறம் அது தோசைக்கு தான் நல்லா இருக்கும். ஆனா எல்லாருக்குமே மல்லிப்பூ மாதிரி வந்துடாது... கொஞ்சமா கல்லு மாதிரி... அட!! கல்லை சாப்பிட்டாலும் செரிக்கற மாதிரி உடம்பு வேண்டாமா? அப்புறம் குஷ்பூ இட்லியாமே ... மல்லிப்பூ தோத்தது போங்க... மாவரைக்கும் பொழுது ஆமணக்கு கொஞ்சம் சேர்க்கணுமாம் ஒருத்தர் டிப்ஸ் கொடுத்தார்... நாங்க கல்லையே செரிச்சுக்கறோம்னு சொல்லிட்டாங்க கேட்டவுக...

இது போக மாவுக்கு போடற உளுந்தையே வறுத்து, அது கூட உப்பு மிளகாய் சேர்த்து அரைச்சு நல்லெண்ணைய் ஊத்தி அப்படியே இன்ஸ்டண்டா தொட்டுக்க இட்லிபொடி கண்டுபிடிச்சவங்களை எப்படி பாராட்டறது? அதுல கொஞ்சமா வெல்லம் சேர்த்து திரிச்சிட்டா புள்ளைங்க அப்படியே மொறு மொறு தோசை, தொட்டுக்க இட்லி பொடினு தினமும் சாயங்காலம் ஸ்நாக்ஸா சாப்பிட சலிக்கறதில்லை.

இப்ப இந்த இட்லி தோசையிலயே ஆயிரத்தெட்டு வெரைட்டி பண்ணலாம்; சாப்பிட யாராவது ரெடினா... என்ன திடீர்னு இட்லி தோசைனு கேட்டீங்களா? இப்ப புள்ளைங்க வயத்துல சாப்பாடு இறங்க திரும்ப சமையலறையில் ஏ,பி,சி,டி எல்லாம் படிக்க வேண்டி இருக்கே? நல்ல வேளையா இட்லி இன்னும் வட்டமா தான் இருக்கு :-)



Tuesday, December 8, 2009

நினைவுகள்

மார்கழி குளிரில்
கம்பளியின் கதகதப்பில்
அம்மாவின் அணைப்பு
மனதை இதமாக்கும்

சுட்டெரிக்கும் வெயிலில்
மரத்தின் குளிர் நிழலில்
அப்பாவின் அரவணைப்பு
தென்றலாக மனதைத் தீண்டும்

பெருமழையில் தெறித்த
மழைத்துளி ஒன்று
உன் முத்தத்தின் நினைவில்
மனதைக் கரைக்கும்

பூங்காற்றின் தீண்டலில்
மழலையின் ஸ்பரிசம்
மனம் தொட்டு
மீண்டும் மீண்டும் தழுவும்

பெருங்கூட்டத்தில் ஒட்டாமல்
தனித்து நிற்கையில்
உறவுகளின் நினைவுகள்
உறங்காமல் உடன் வரும்

வாடிச் சருகாக
எரியக் காத்திருக்கும் வேளையில்
உயிரோட்டமாக நினைவுகள்
உயிர் துடிக்க வைக்கும்...

Wednesday, December 2, 2009

புத்தம் புது கவிதைகள்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கின கவிதைகள்
பூப்பறிக்க சென்ற மகள்
பறித்து வந்தாள் கொத்தாக

வாசமாக வீட்டினுள் பரவியது
கணநேரம் மெய்மறந்து ... பின் மறந்துவிட்டோம்
வாசிக்கச் சொல்லி வீட்டைச் சுற்றின
அழகான குட்டிக் கவிதைகள்

சமைத்துக் கொண்டிருந்தேன் நான்
படித்துக் கொண்டிருந்தார் கணவர்
விளையாடிக் கொண்டிருந்த மகளுடன்
ஓட்டிக் கொண்டது குட்டிக் கவிதையொன்று

மகளின் புன்னகையாக, மழலையாக
கோபமாக, அழுகையாக என
நித்தம் வாசித்துக் கொண்டிருக்கிறோம்
புத்தம் புது கவிதைகளை...

Tuesday, December 1, 2009

வானத்து நட்சத்திரங்களை எண்ண முடியுமா?

”வானத்து நட்சத்திரங்களை எண்ண முடியுமா?”
“எண்ண வாழ்நாள் போதாது”


படித்த ஒரு புத்தகத்தில் மனதில் நின்ற வரிகள். வாசிப்புக்குப் பொருந்தும் வரிகள். பதிவுலகம் மூலம் தான் எத்தனை எழுத்துக்களை , புத்தகங்களை அறிந்து கொள்ள முடிகிறது. படிக்க தான் வாழ்நாள் போதாது போலும்... புத்தகங்கள் படித்து முடித்தவுடன் அந்த எழுத்துக்களின் ஆக்ரமிப்பில் மனதில் தோன்றும் உணர்வை என்னென்பது? சிலருக்கு தான் அதை அழகாக விமர்சிப்பது கைவந்த கலை. எனக்கு வருவதில்லை அருமை, நன்றாக இருக்கிறது என்பது தவிர சொல்லத் தெரிவதில்லை. சமீபத்தில் அமித்து அம்மாவின் பகிர்வில் படித்தது “மாலன் சிறுகதைகள்”. யதார்த்தமான நிகழ்வுகளையும் உணர்வுகளையும் சொல்லும் சிறுகதைகள். மனதில் நின்றவை சிலவற்றை சொல்ல முயற்சிக்கிறேன்:


தப்புக்கணக்கு

இந்த தொகுப்பு தப்புக்கணக்கோடு தான் தொடங்குகிறது. இதைப் படித்தபின் அடுத்த கதை தொடர மனமின்றி இந்த கதையையே சுற்றியது மனம். 2X7=14 என்பதை 7X2 என்று எழுதிய ஜனனிக்கு மதிப்பெண் இல்லை. அதை அவர் தாத்தா கேட்க பள்ளியின் வெவ்வேறு பொறுப்பில் உள்ளவரை அணுக... நமக்கு நம் மனப்பாடக்கல்வியின் முட்டாள்தனமும், செக்கு மாடு போல் சுற்றும் பாதையில் இருந்து விலக இயலா மனமும் தெரிகிறது. முடிவில் 2X7=14 என்பதை 7X2 என்று அவள் எப்படி சிந்தித்தாள் என அறிந்து அவள் புத்திசாலித்தனத்தை மெச்சுகிறார் தாத்தா. ஆனால் பெற்றோர் கவலைபடுகின்றனர். ஏன்? அவள் பெண் குழந்தை என்பதால்... கொடுத்தமாதிரி அல்லாது வேறு மாதிரி யோசிக்கும் குழந்தை பின்னால் நிறைய கேள்வி கேட்பாள்... காயப்படுவாள்...உலகோடு ஓவ்வாதிருந்து அவளுக்கும் அவஸ்தை மற்றவருக்கும் இம்சை. எனவே “டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறாளோ அப்படியே கணக்கு போடு. அதிகப்பிரசிங்கத்தனமெல்லாம் பண்ணாதே” என்று அறிவுறுத்தப்படுகிறாள்.

நான் கதை படித்து சற்று நேரம் உறைந்து போனேன். என் பெண் ஆடி, பாடி இன்னும் பல தன் திறமைகளை வெளிப்படுத்துபொழுதெல்லாம் மனதுள் “இறைவா... இவள் பின்னாளில் கஷ்டப்படக்கூடாது” என்னுள் ஒலிக்கும் குரலை உரத்து கூறினாற் போல் இருந்தது கதை. இந்த வருத்தம் கொஞ்சம் மிகையாகத் தெரிந்தாலும் பெண்ணின் திறனை பார்க்கும் பொழுதெல்லாம் திருமணத்திற்குப்பின்(அது காதல் என்றாலும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது என்றாலும்) சிறகுகள் வெட்டப்பட்டு காம்ப்ரமைஸ் என்று ஊமை வலியுடன் உலவும் சில பெண்களின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.


இதெல்லாம் யாருடைய தப்பு?

தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் படித்த பெண் வேலை இன்றி தவிக்க, தமிழை நிராகரித்து ஆங்கிலம் படித்த சகோதரி வசதியாக செட்டிலாகிறாள். மேடைப்பேச்சாளர் ஆகிறாள் தமிழ் படித்த பெண்... அருவி போல தமிழ்க்கவிதை சொல்லவில்லை...துணுக்கு, கவிதை, மேற்கோள், சிலேடை என்று பேசுகிறாள். கூட்டம் சிரிக்கிறது கை தட்டுகிறது. “எனது தமிழால் யோசிக்க வைக்க முடியவில்லை. கிச்சுகிச்சு மூட்ட முடிகிறது” என்று முடிக்கும் பொழுது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.


வித்வான்

வயலின் வித்வானுக்கு அவரது சிஷ்யன் தரும் பரிசு எதையும் கற்றுக்கொண்டு துல்லியமாக செய்யும் “யஷ்ணி” என்னும் யந்திரம். எல்லாம் செய்யும் அது அவரது வயலின் மட்டும் தொட அனுமதி இல்லை; சங்கீதம் கற்றுக் கொள்ளவும் மறுக்கப்படுகிறது. ஒரு நாள் அதன் இசையில் மயங்கும் அவர் இயந்திரத்தின் இசை என அறிந்தவுடன் கோபம் கொள்கிறார். யஷ்ணி தன் சங்கீதத்தை அவர் கோபம் கண்டு அழித்துவிடுகிறது. சிறிது நேரம் மனப்போராட்டத்திற்குப் பிறகு ஏற்கும் மனதுடன் வருபவர் யஷ்ணி சங்கீதத்தை மறந்தது அறிந்து அதற்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறார்.

சென்ற வாரம் திருமண நாளுக்காக திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சென்றிருந்தோம். கோயில் சென்றால் அபிஷேகம், அலங்காரம் என்பதற்கு எல்லாம் எனக்கு பொறுமை இருப்பதில்லை. அன்று கோவிலில் நான்கைந்து பேர் கணீரென பாடிக்கொண்டிருந்தார்கள். மனதை ஈர்த்து அங்கே என்னை நிறுத்தியது அந்த பாடல்கள்... அந்த குரல்களில் இருந்த உயிர்ப்பு... அது மனிதர்களின் சங்கீததத்தை நேரில் கேட்பதன் உயிர்ப்பு என்று தோன்றியது. மின்வடிவில் கேட்டிருந்தால் இவ்வளவு உயிர்ப்பு இருக்காதோ என்று தோன்றியது... மனப்பிரமையோ? யஷ்ணி நினைவுக்கு வந்தது.


பிரச்னையின் பெயர்: சந்திரலேகா

கல்லூரியில் தேர்தலில் நிற்கும் சந்திரலேகா... போட்டியிடும் திமிர் பிடித்த ஆணால் அவமானப்படுத்தப்பட்டாலும் , போராட்ட மனப்பான்மையுடன்அதையே ஆயுதமாக மாற்றும் சந்திரலேகா...வாழ்க்கையில் சராசரி இல்லத்தரசியாகத் தான் வாழ்கிறாள். நீயா என்று வியக்கும் நண்பனிடம் அவள் கூறுவது தான் இன்றைய பல சந்திரலேகாக்களின் விலங்கு... ”கல்லூரிக்குள் கலவரம் வரலாம். குடும்பத்தில் கூடாது நண்பா.”

பெரும்பான்மையான பெண்கள், என்ன தான் சம உரிமை என்று பேசினாலும் குடும்பம் என்னும் கூடு கலையாதிருக்க காம்ப்ரமைஸ் செய்து வாழ்கின்றனர் என்பது தான் உண்மை.


ஆதலினால் இனி

”புத்தகங்களைப் படித்து வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற மயக்கங்களில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன்” என்று துவங்கும் கடிதத்தில் அதற்கான அனுபவம் சொல்லப்படுகிறது. தான் படித்த மருத்துவ கல்லூரியில் தன் சட்டையை சுண்டி இழுத்து, இரண்டு ரூபாய் பிச்சை கேட்கும் கை உடைந்த பையனைக் கண்டு சினம் கொள்கிறான் முன்னாள் மாணவன். பின் அது பிச்சை அல்ல, வைத்தியம் பார்க்க கேட்கப்படும் இலஞ்சம் என அறிந்து டீன் வரை பிரச்னை கொண்டு செல்கிறான். “நீ இவனுக்கு என்ன உறவு” என்ற கேள்விக்கு , “நான் முன்னாள் மாணவன். ஊனங்கள் இருந்தும் நாம் நம் தேசத்தை விரும்புவதில்லையா. அது போல் இது என் கல்லூரி என்பதில் எனக்கு ஒரு விதமான பெர்சனல் பிரைடு (Pride). அதுவே என்னை உங்கள் முன்வரை இழுத்து வந்திருக்கிறது” என்பான். “நானும் பெருமைப்பட விரும்புகிறேன்” என்று கூறி டீன் மேற்கொண்டு அந்த பையனின் சிக்கிச்சைக்கு ஏற்பாடு செய்வார்.
“புத்தகத்தில் படித்த தத்துவங்கள் என்னைப் போராடத் தூண்டவில்லை. சட்டையை சுண்டி இழுத்த வாழ்க்கை தான் என்னை ஏதாவது செய் என்று உந்தியது” என்ற வரிகள் யதார்த்தம்.

ஒவ்வொருவருக்குள்ளும் இந்த பிரைடு இருந்தால் எல்லாம் தானாக சரியாகிவிடுமோ?


மாறுதல் வரும்

அரசியலால் கள்ளச்சாராயத்ததை எதிர்த்து உயிரைக் கொடுத்த ஒருவனின் வாழ்க்கையின் உண்மைகள் துவக்கும் நண்பர்களுகிடையான உரையாடல். முடிவில் மாறுதல் வரும் என்று சொல்லப்படும் வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. “... ஆட்கள் மாறுவதன் மூலம் ஆட்சி மாறலாம். அரசியல் மாறாது. உங்கள் கலாச்சாரத்தை நசிவில் இருந்து மீட்டு எடுக்காதவரையில் உங்கள் அரசியல் மாறாது. அதற்கு என்ன செய்யப் போகிறாய்?”

ஆம் என்ன செய்யப் போகிறோம். எது கலாச்சாரம்? சக மனிதரை மனிதராக பார்ப்பது நம் கலாச்சாரம் என்று எப்பொழுது தலை நிமிர்ந்து சொல்வோம்?


காணாமற் போனவர்கள்

“எங்களை வயலினின் மூன்று தந்திகள் என்று யார் சொன்னார்கள் என்பது இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் அதுதான் அன்று உண்மை” என்று துவங்கும் மூன்று பேர் தோழிகளான கதையும் ஒருத்தியின் காதலை சேர்த்து வைத்த கதையும்.

முடிவு? ரகளையில் செருப்பு வீசிக் கவிதையைக் காப்பாற்றிய அருணாவுக்கு நானும், கை வளையலைத் தானம் செய்து கல்யாணம் நடத்திய கீதாவுக்கு அவளும் ஆயுசு முழுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், இன்று யார் யார் எங்கு எப்படி இருக்கிறோம் என்று எங்கள் மூன்று பேருக்குமே தெரியாது. ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் வாழ்க்கை


சில நாட்களுக்கு முன் தொடர்பதிவாக கவிதா/மீனா கடிதம் பதிவுலகில் வலம் வந்தது. பெரும்பாலானவை திருமணத்திற்கு பின் மாறிவிட்ட பெண்களின் வாழ்க்கையையும் ஏக்கங்களையும் பிரதிபலிக்கும். எங்கள் கல்லூரியில் கூட எங்கள் மூவருக்கு “த்ரீ மஸ்கிட்டீஸ்” என்றார் எங்கள் ஆசிரியர். ஆனால், இன்று யார் யார் எங்கு எப்படி இருக்கிறோம் என்று எங்கள் மூன்று பேருக்குமே தெரியாது.

முத்து முத்தாக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஒவ்வொரு கதையும் சிந்தனையைத் தூண்டுகிறது, ஏன் என்று யோசிக்க வைக்கிறது. அருமையானதொரு தொகுப்பு.

Monday, November 30, 2009

தீபாவளி நினைவுகள் - தொடர் பதிவு

உழவன் இந்த தொடருக்கு அழைச்சு ரொம்ப நாளாச்சு. கார்த்திகை தீபமேற்றி வேட்டு போடறதுக்கு முன்னாடி பதிவைப் போட்டுடலாம்னு.... வழக்கம் போல் தாமதத்திற்கு மன்னிக்கவும்...

1) உங்களைப் பற்றி சிறுகுறிப்பு?
சிறுகுறிப்பா? வள வளனு பேசுபவளிடம் சிறுகுறிப்பு கேட்டால் எப்படி?

2) தீபாவளி என்ற உடன் உங்கள் நினைவுக்கு வரும் (மறக்க முடியாத) சம்பவம்?
ஆட்டம் பாமை சிரட்டைக்குள் வைத்து வெடித்து சிதறிய சில்லில் வீங்கிப்போன அம்மாவின் முகம்.

3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?

சென்னை

4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடப்படும் தீபாவளி பற்றி ஒரு சில வரிகள்?
ஊரில் எல்லோரும் சேர்ந்து என்ன பலகாரம் என்று கலந்தாலோசித்து, வாழ்த்துக்கள் பரிமாறி, வாசல் நிறைத்து கோலமிட்டு கோலம் அலங்கோலமாக பட்டாசு வெடித்து என்று எல்லாவற்றையும் மறந்து ... ஓ தீபாவளி... சரி புத்தாடை .. பட்டாசு என்று கடமையாக மாறிவிட்டாற் போல் ஓர் உணர்வு...

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா?
தி.நகரில் கூட்டமில்லாமல் SKC இருந்தது. ஒரு மாலை சென்று எல்லோருக்கும் எடுத்துவிட்டோம்.

6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?
முறுக்கு, பால்கோவா.

7) உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்? (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)

தொலைபேசி , மின்னஞ்சல், குறுஞ்செய்தி

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்து விடுவீர்களா?

இரண்டும் செய்வோம்.

9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒரு சில வரிகள்? தொண்டு நிறூவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம்?

எங்கள் வீட்டில் எந்த ஒரு நல்ல நாளுமே அருகில் இருக்கும் தொண்டு நிறுவனத்திற்கு உணவு ஸ்பான்சர் செய்வது வழக்கம். இந்த முறை தீபாவளி ஓட்டி CRYக்கு வழங்கினோம்

10) நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?
தீபாவளி நினைவுகளைப் பொங்கலுக்கு போடற அளவுக்கு நான் லேட், அதனால் ”ஸ்டாப் த ம்யூஜிக்”

Monday, November 23, 2009

வண்ணத்துப்பூச்சி எங்கே போச்சு?



பரபரத்துக் கொண்டிருந்த போக்குவரத்து நிறைந்த சாலையை மின்னலாக அழகுபடுத்தி படபடத்து மறைந்தது வண்ணத்துப்பூச்சி ஜோடி ஒன்று. அந்த அழகை எவரும் இரசித்ததாகத் தெரியவில்லை. பட்டாம்பூச்சி பறப்பதால் வசந்த காலமோ என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. வெயிலும் மழையும் தவிர காலத்தை கணிக்க வேறொன்றுமில்லாத அலுப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் மீண்டும் மேம்பாலமருகே பட்டாம்பூச்சிகள் ஒன்றை ஒன்று துரத்தி மறைந்தன. எங்கே சென்றிருக்கும் என்ற எண்ணத்துடன் வண்ணத்துப்பூச்சி நினைவுகளைத் துரத்தியது மனம்.

வண்ணத்துப்பூச்சி மட்டும் தானா? பொன்வண்டு, மின்மினி பூச்சி என்று எத்தனை பூச்சிகள் மனதைக் கவர்ந்தன. தீப்பெட்டிக்குள் குடி வைக்கப்பட்டு இலைகளால் வளர்க்கப்படும் பொன்வண்டு, பின் கருணையால் விடுவிக்கப்படும். மின்மினி பூச்சிகளைக் காண்பதற்காகவே முற்றத்து விளக்குகள் அணைக்கப்படும். மிகவும் பாவப்பட்ட ஜீவன் இந்த பட்டாம்பூச்சி தான்.

வசந்தத்தின் வருகையை பூமெத்தை விரித்து தாவரங்கள் வரவேற்க, மெலிதான சில்லென்று காற்று கட்டியம் கூற வண்ணத்துப்பூச்சிகளின் நடனம் துவங்கும். பெரிதாக கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் இராஜா வர, ஆழ்ந்த பழுப்பு வண்ணத்தில் கருப்பு கோடுகள் அலங்கரிக்க இராணி வர, சின்ன சின்ன மஞ்சள் நிறத்து சேடியர் பூக்களை முத்தமிட, இன்னும் பல வண்ணங்களில் ஏனையோர் நடனமிட வசந்தம் புன்சிரிப்போடு நுழையும். பூக்களை முத்தமிட்டு செல்லும் அந்த பட்பட் பட்டாம்பூச்சிக்கு எப்படி தான் என் கைகளின் வாசனை தெரியுமோ? சட்டென்று மறைந்து மாயாவியாக மீண்டும் நான் விலகிய பின் வந்தமரும்.

குட்டிப்பையன்களின் கை சும்மா இருக்காது. வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்கள் அவர்கள் கைகளில் ஒட்ட, பிளாஸ்டிக் பைகளில் படபடக்கும் நிறமிழந்தாலும் நிறம் மாறா வண்ணத்துப்பூச்சிகள். “உன்னை அடைத்தால் எப்படி இருக்கும்” என்ற சண்டைகளுடன் அவற்றுக்கான விடுதலை போராட்டங்கள் ஆரம்பிக்கும். பட பட என்று சிறைக்குள் போராடி ஓய்ந்து விழும் சமயம் தான் பையன்களின் மனம் கரையும், சிறை திறக்கும். சற்றே தளர்ந்து நகர்ந்து, பின் சுதந்திரக்காற்றின் ஸ்பரிசத்தில் துள்ளி எழுந்து மீண்டும் படபடத்து பறந்து மறையும் வானவில் வண்ணங்கள். பட்டாம்பூச்சியின் வளர்ச்சியைப் பாடத்தில் மட்டுமே கவனித்திருந்தேன் சில வருடங்கள் முன் வரை...

அலுவலகம் முடிந்து வரும் வேளையில், நந்தினி ஓடிவந்தாள் "அம்மா, பட்டாம்பூச்சி முட்டை போட்டிருக்கும்மா வந்து பாரேன்... ஐயாப்பா காட்டினாங்க". எனக்கு அது பட்டாம்பூச்சி முட்டை என்று தோன்றவில்லை. அவள் திருப்திக்காக எட்டிப்பார்த்தேன். "அம்மா முட்டை பொரிச்சு புழு வந்துடுச்சு... இலையெல்லாம் ஓட்டை ஓட்டையா இருக்கு பாரேன்". கம்பளி புழு என்றால் எட்டடி ஓடும் நான் அவளுக்காக மீண்டும் எட்டிப்பார்த்தேன். "அம்மா கூடு கட்டி உள்ள போயிடுச்சு...". மெல்ல ஆர்வம் எட்டிப் பார்க்க தினம் எட்டிப் பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வந்து இருள் கவியும் வரை, தாத்தாவும் பேத்தியும் அந்த செவ்வரளிச் செடியருகில் கழிக்கும் நேரங்கள் கவிதை போன்று இனிமையானவை. "அம்மா பட்டாம்பூச்சி பறந்து போச்சு..." கண்களில் அதிசயத்துடன் மகள், பேத்திக்கு இயற்கையைப் போதித்த திருப்தியில் மாமா.

மெல்ல எட்டிப் பார்த்தேன்... பட்டாம்பூச்சியின் சாட்சியாக காலியான கூடு. எங்கே பறந்து போச்சு? மீண்டும் வீடு தேடி வருமா என தெரியவில்லை. எத்தனை பேருக்கு அமையும் பிறந்ததில் இருந்து இறுதி வரை அதே இடத்தில் வாழ்க்கை? உயிர் கூட்டைப் பிரியும் வரை... எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழ்ந்து எங்கே முடியப் போகிறதோ??? செவ்வரளி தழைத்தவுடன் மீண்டும் வந்தது வண்ணத்துப்பூச்சியின் முட்டைகளும் தாத்தா பேத்தியின் கவிதையான நேரங்களும். இப்பொழுது செவ்வரளிச் செடியும் இல்லை, மாமாவும் இல்லை... நினைவுகள் மட்டும் நெஞ்சில் பசுமையாக வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களாக... நினைவு இருக்கிறதா என் செல்ல மகளே ஐயாப்பாவுடனான அந்த இனிய பொழுதுகள்?

Sunday, November 22, 2009

பதில் வராத கடிதங்கள்

காகிதமோ மின்வடிவோ
மனதைச் சுமந்து வருபவை...
அன்பு, கோபம், வலி
என்று ஏதோ ஒன்றைத்
தாங்கி வருபவை...

கடிதங்கள்!!!

முகவரி தொலைத்த கடிதங்கள்
இடம் மாறி மறைந்தோ
எழுதப்படாமல்...
நினைவுகளில் மட்டும் நிறைந்தோ...
முகம் இழந்து கரைந்திருக்கலாம்

முகவரி தொலைத்ததோ
நம் முகம் தொலைத்ததோ...
பதில் வராத கடிதங்களால்...
மனதில் உறுத்திக் கொண்டிருக்கும்
நிராகரிப்பின் வலி

Thursday, November 12, 2009

திண்ணை தொலைத்த வீடுகள்

திண்ணை என்பது..
உறவும் நட்பும்
அளவளாவும் பூந்தோட்டம்
களைத்த வழிப்போக்கரும்
சற்றே இளைப்பாறலாம்
ஓய்வாக அமர்ந்து
பராக்கும் பார்க்கலாம்

பரபரக்கும் வாழ்க்கையில்
உட்கார நேரமில்லை
உறவாட பொழுதில்லை
முகமறியா மனிதர்
புன்னகைத்தாலும் ஐயம்...
அறிந்த மனிதரையே
வீட்டுள் அழைக்க பயம்...
அறியா மனிதருக்கு
திண்ணையில் இருக்குமா இடம்?

மனிதம் மறையும் உலகில்
மனதைத் தொலைத்தனர் மனிதர்கள்
திண்ணை தொலைத்தன வீடுகள்

Wednesday, November 11, 2009

குழந்தைகள் கையில் பலூன்

சின்ன சின்ன கைகளில்
பச்சை நிற பலூனுடன்
பட்டாம் பூச்சியாக
படபடத்துக் கொண்டிருந்த
மழலையின் கண்களில்
வசந்த காலம்

சிவப்பு நிற பலூனுடன்
பட்டாம் பூச்சியாக
படபடத்துக் கொண்டிருந்த
மழலையின் கண்களில்
மழைக் காலம்...
பச்சை நிற பலூன் கேட்டு

பலூனின் நிறத்தில்
ஒன்றுமில்லை என
சிவப்பின் மகத்துவத்தை
சொல்லலானாள் தாய்

குழந்தைகள் கையில் பலூன்
பெரியவர்கள் கையில்...
கனவுகளும் வாழ்வின் தருணங்களும்!!!

Thursday, November 5, 2009

விருப்பு வெறுப்புகள் - தொடர் பதிவு

பின்னோக்கியின் அன்பான அழைப்பிற்காக இந்த பதிவு...

1. அரசியல்வா(வியா)திகள்
பிடித்தவர் : பெருந்தலைவர் காமராஜர்
பிடிக்காதவர்: இப்ப இருக்கிற அரசியல்வியாதிகளைப் பிடிக்கும்னு எத்தனை பேரைச் சொல்லமுடியும்? ஆனால் பிடிக்காதுனு எல்லாரையும் கைகாட்டலாம்.

2.இயக்குனர்
பிடித்தவர் : பாசில்
பிடிக்காதவர் : எஸ்.ஜே.சூர்யா


3. நடிகர்
பிடித்தவர் : சூர்யா
பிடிக்காதவர்: சிம்பு

4. நடிகை
பிடித்தவர் : பாவனா
பிடிக்காதவர் : ஸ்ரேயா

5. எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ்.ரா, அனுராதா ரமணன்
பிடிக்காதவர்: புஷ்பா தங்கதுரை, சாருநிவேதிதா

6. பாடகர்
பிடித்தவர் : எஸ்.பி.பி
பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லை

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர் : தேவா

---
இந்த தொடர் விளையாட்டுக்கு இவங்களை அழைக்கிறேன்:
1. கோபி
2. ஊர்சுற்றி


இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்

Saturday, October 31, 2009

முத்துக்களும் கவிதைகளும்...

எல்லா முத்துக்களும்
முத்துமாலைக்கு செல்வதில்லை

பவழத்தோடு சேர்ந்து
பளபளத்துக் கொண்டிருக்கலாம்

வைரத்தோடு சேர்ந்து
நிறம் மங்கி தெரியலாம்

சரத்திலிருந்து அவிழ்ந்து
காணாமல் இருக்கலாம்

எடுக்கப்படாத முத்துக்கள்
கோர்க்கப்படாத முத்துக்கள்

என்று பார்வை மறுபாடுகள்
நம் கண்களுக்குத்தான்

எங்கே இருந்தாலும் முத்துக்கள்
முத்தான தனித்தன்மையுடன் தான் உள்ளன...

நிராகரிக்கப்பட்ட படாத
கவிதைகள் போலவே!!!!

Friday, October 30, 2009

சொல்லப்படாத கதை ஒன்று

சொல்லப்படாத கதை ஒன்று
விழித்தெழுந்து சொல்ல‌ப்ப‌ட‌
ப‌ய‌ண‌ம் கொண்ட‌து

உழைத்துக் கொண்டிருந்தோருக்கு
க‌தை சொல்ல‌வோ கேட்க‌வோ
நேர‌மில்லை

உறங்கிக் கொண்டிருந்தோருக்கு
கனவில்கூட கதைக்கு
இடமில்லை

தொலைக்காட்சியில் க‌ட்டுண்டோருக்கு
இந்த‌ க‌தை கேட்க‌
விருப்ப‌மில்லை


ப‌டித்துக் கொண்டிருந்த‌ குழ‌ந்தைக்கு
க‌தை கேட்க‌வோ சொல்ல‌வோ
அனும‌தியில்லை

ப‌ய‌ணித்துக் க‌ளைத்த‌ க‌தையை
அம்மா அழைத்து
குழ‌ந்தைக்கு சொன்னாள்

எங்கோ...
சொல்லப்படாத கதை ஒன்று
விழித்தெழுந்து சொல்ல‌ப்ப‌ட‌
ப‌ய‌ண‌ம் கொண்ட‌து

Monday, October 26, 2009

வேலை வேலை வேலை...

வேலை வேலை வேலை...என்றுதான் சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. பத்திரிக்கை கூட படிக்க நேரம் கிடைக்காது வீடு, அலுவல் என்று ஓடும் வாழ்க்கை... ஓடுவது பெரிதல்ல.. வீடு அதிராமல் ஓட வேண்டும்... சோதனையாக வீட்டில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வேலைப்பளு. இரண்டு நாட்களுக்குள் குழந்தைகள் "சீக்கிரம் வாம்மா" என்று கூற ஆரம்பித்தனர். கவனித்துக்கொள்ள பாட்டியும் விளையாட சகோதரிகள் இருந்தாலும் அம்மா அப்பாவின் அருகாமையைத் தேடும் குழந்தைகள்...

தொழில் நுட்பத்தின் உதவியால் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை வரப்பிரசாதமாக இருந்தது. பிறர் உதவி தேவைப்படாத ஒரு நாளில் அடித்துப் பிடித்து ஆறரைக்கு வீட்டில் பெருமையுடன் நுழைந்தால் "இருட்டின பிறகு வராதே!!! வெளிச்சத்தில் வாம்மா" என்று கெஞ்சுவாள் சின்னப்பெண். மீண்டும் போராடி மறுநாள் ஐந்தரைக்கு நுழைந்தால் "நான் ஸ்கூலில் இருந்து வரும்பொழுது நீ இல்லை..." என்று இன்னும் எதிர்ப்பார்க்கும் குழந்தையின் ஏக்கத்தில் மனம் நெகிழ்ந்து போகும்.

என்றாலும் இந்த "வீட்டிலிருந்து வேலை" எனக்கு வசதி தான். அலுவலகத்தில் தாமதமாக உட்கார்ந்து "இன்னும் வீட்டிற்கு கிளம்பலையே!!" என்ற கவலை கிடையாது. அம்மா இருக்கும் மகிழ்ச்சியில் தம் வேலைகளிலும் விளையாட்டுக்களிலும் மூழ்கி விடுவர் குழந்தைகள். அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து ஒரு சின்ன முத்தத்தில் மகிழ்ந்து போகும் குழந்தைகளின் "இதெல்லாம் செய்யணும்னு உனக்கு எப்படிம்மா தெரியும்" என்று வேலை செய்பவளைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு மனம் சிரிக்கும். அமுதூட்டி படுக்கைக்கு அனுப்பும் வேளையில் "கதை சொல்லி தூங்க வைம்மா" என்பார்கள். "எனக்கு நிறைய வேலை இருக்குடா கண்ணா" என்றால், "ஒரே ஒரு கதை சொல்லிட்டு வந்து வேலை பண்ணும்மா" என்பார்கள்.

மனம் நான் அம்மாவிடம் அனுபவித்த சுகத்தை அசை போடும். கல்லூரி விட்டு வரும்பொழுது அம்மா இருந்து பரிமாற வேண்டும். இல்லை என்றால் உணவு உண்ணமாட்டேன் என்று அம்மா நான் வந்த பின் எனக்கு பரிமாறிவிட்டு வெளியே செல்வார்கள். அப்பொழுது அம்மாவிடம் பெறுவது எனது உரிமையாகத் தோன்றியது.

இன்று குழந்தைகள் தான் எவ்வளவு புரிந்து நடந்து கொள்கிறார்கள். விடுமுறையில் தான் என் நேரத்தைக் கேட்கிறார்கள். ""ஒரே ஒரு கதைம்மா..." என்று கொஞ்சல். மனதுள் மின்னஞ்சல் ஒன்றின் வரிகள் ஓடின "இளமையில் சக்தியும் நேரமும் இருக்கிறது, பணம் இல்லை... பின்பு சக்தியும் பணமும் இருக்கிறது நேரமில்லை... முதுமையில் நேரமும், பணமும் இருக்கிறது சக்தி இல்லை..."

"ஒண்ணு என்னடா ரெண்டு சொல்கிறேன்..." என்று கதை கூற ஆரம்பித்தேன். என் கற்பனை இறக்கை கட்டிக் கொண்டது. வேலை காத்திருக்கட்டும்.. இன்னும் கொஞ்சம் தூக்கம் தொலையலாம்... ஆனால் என் கண்மணிகளுடன் நேரம் தொலையலாமா? பல மணி நேரம் வேலைக்கு இருக்கும் நேரம், சில மணித்துளிகளிலேயே மகிழ்ந்துவிடும் குழந்தைகளுக்கு இல்லாமல் போகுமா? முதுமையில் புத்தகம் வாசிக்கும் சக்தியாவது இருக்க வேண்டும் என்று எண்ணியபடி கற்பனை உலகில் அவர்களுடன் சஞ்சரித்தேன். உதட்டில் புன்னகை தவழ உறங்கும் மொட்டுக்களை காணும் நிம்மதிக்கு உலகில் எதுவும் ஈடு கிடையாது.

Sunday, October 11, 2009

கிடைத்த இடைவெளியில்....

வணக்கம். கொஞ்ச நாளாக வேலை அதிகம். பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. யார் ப‌திவும் படிக்க இயலவில்லை என்பது தான் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த மாதம் முழுதும் அப்படி தான் என்று எண்ணுகிறேன். எனவே கிடைத்த இடைவெளியில்....உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

தோழியின் மகள் கூறியுள்ளாள், "பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்... சின்ன கைகளால் செய்யப்படுகிறது". சின்னவள் சொன்னாள் "அவங்க கை சின்னதா இருந்தால் நாம என்ன செய்ய? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கை இருக்கும்."

Jokes apart...
வீட்டிற்கு வந்தால், நந்தினியும் "பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்" என்கிறாள் அதே காரணம் தான். இந்த விழிப்புணர்வைக் கொண்டு வந்ததற்காக நிச்சயம் பள்ளிகளைப் பாராட்ட வேண்டும்.

Tuesday, September 29, 2009

இன்பத்தைத் தேடி...

இளம்வெயிலை அனுப்பி
புன்னகை பரப்பினான்
காலை இளஞ்சூரியன்

மகிழ்ச்சியை அள்ளிக்கொண்டு
மென்மையாகக் கடந்தது
மெல்லிய இளங்காற்று

ஆனந்தத்தைத் தெளித்து
அள்ளச் சொன்னது
குழந்தையின் சிரிப்பு

எதையும் கவனிக்காமல்
இன்பத்தைத் தேடுவதாக
சொல்லிக்கொண்டு...
தொலைத்(ந்)துக் கொண்டிருந்தேன்!!!

ஊஞ்சலாடும் நினைவுகள்

சமீபத்தில் ஊருக்கு சென்று வீடுகள் நிறைந்த ஒரு இடத்தைக் கடக்கும் பொழுது அம்மா சொன்னார் "இங்க தான் நாங்க சோத்தைக்கட்டிட்டு வந்து ஊஞ்சல் விளையாடுவோம். அப்ப இது காடா கிடக்கும். இப்ப பாரு", என்று. ஊஞ்சல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விஷயம். இன்றைக்கும் பூங்காக்களில் "குழந்தைகளுக்காக" என்று போட்டிருந்தாலும் விளையாடும் பெரியவர்களைக் காணலாம். சட்டென்று மனம் ஊஞ்சல் நினைவுகளைத் தேடியது;

கோவையில் வனச்சரகக் குடியிருப்பு தான் நான் வளர்ந்த இடம். வீட்டருகில் நிறைய புளிய மரங்கள் நாங்கள் விளையாட நிழலை விரித்துக் காத்திருக்கும். சிறுவர்களின் விளையாட்டுத் திடல் அது தான். அதன் மரக்கிளைகளில் தொங்கி ஊஞ்சல் ஆடிய பொழுதுகள் இன்றும் பசுமையாக... அந்த நிழலின் குளுமையாக....அதன் பின் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வராண்டா வந்தது. நல்ல தாம்புக் கயிறும், சின்னதாக ஊஞ்சல் பலகையும் வாங்கி அப்பா ஊஞ்சல் போட்டுத் தந்தார்.எனக்கும் என் தம்பிக்கும் இடையில் ஊஞ்சல் யாருக்கு என்று அடிக்கடி யுத்தம் நடக்கும். சில சமயம் ஊஞ்சலில் தட்டாமாலை சுற்றி, தாம்புக்கயிறில் முடியும் சுற்றி, கத்திரிக்கோல் உதவியின்றி நான் எழுந்தது இல்லை. என்றாலும் ஊஞ்சலும் தட்டாமாலையும் அடிக்கடி நடக்கும்.

பின் வீடு மாறியதால் சற்றே நீளமான வராண்டா... தாம்புக்கயிறு இரும்புச் சங்கிலி ஆனது... "ஜிவ்வென்று" மேலே வரை ஊஞ்சலாடி இறங்குவதே பறப்பது போல் இருக்கும். சில சமயம் நிலைப்படி தட்டி கொஞ்சம் கீழே இறக்கிவிடும். அதில் தான் நந்தினியும் சிரித்துக் கொண்டே ஊஞ்சல் ஆடுவாள். இப்பொழுது அவள் சிரிக்கும் பொழுதெல்லாம் நினைக்கும் சம்பவமாக ஊஞ்சல் ஆனது. ஆடிக்கொண்டிருந்தவளை நோக்கி அவள் தந்தை கை நீட்ட, சட்டென்று கையை விட்டவளைப் பிடிக்க இயலவில்லை. வாய் முழுதும் இரத்தம். டாக்டரிடம் போய், மருந்து போட்டு ஒரு மணி நேரத்தில் எல்லாம் சரியானது. சில மாதங்கள் கழித்து தான் பார்த்தோம், பல்லில் கறை போல்... ஏதோ வளர்ச்சி தடைபட்டுவிட்டது போலும்...வேர்கள் நன்கு வளர்ந்தபின், பதின்ம வயதில் தான் அதற்கு வைத்தியம் பார்க்கலாமாம்... ம்ஹ்ம்... ஊஞ்சல் ஆசை...


எனக்கு சினிமாவில் வருவது போல் பெரிய ஊஞ்சல் ஹாலில் போட்டு படிக்க, படுக்க வேண்டும் என்று ஆசை. வீடு கட்டும்பொழுது மாமாவிடம் சொல்ல, அவரே மரம் பார்த்து வாங்கி ஒரு ஆள் படுக்கும் அளவு ஊஞ்சல் பலகை செய்து வாங்கினார். வீட்டுக்கூரையிலும் கொக்கி எல்லாம் வைத்தாயிற்று... ஆனால் வீட்டுள் ஊஞ்சலுக்கு இடம் கொடுத்தால் வேறு எதற்கும் இடம் தான் இல்லை. எனவே ஊஞ்சல் வீட்டு முகப்பிற்கு வந்தது. ஆசை தீர உட்கார்ந்து, படுத்து , படித்து.... அதன் பின் கார் வந்து அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

இப்பொழுது ஊஞ்சல் பலகை ஓய்வெடுக்கிறது. அதன் இரும்பு சங்கிலி தொட்டில் கட்டவும் பிரம்பு கூடை ஊஞ்சல் தொங்கவும் உதவுகிறது. அந்த பிரம்பு ஊஞ்சலில் தான் மாமா அமர்ந்து யாழினியைத் தோளில் சாய்த்து உறங்க வைப்பார். இப்பொழுது அந்த ஊஞ்சல் சும்மா காற்றில ஆடிக்கொண்டு இருக்கிறது. வீட்டிற்கு யாரேனும் வந்து அதில் அமர்ந்தால் தான் அதற்கு சண்டை துவங்கும். வாழ்க்கையே ஊஞ்சல் தான்!!!! நாம் உட்கார்ந்து இருக்கிறோம்... யாரோ ஆட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... சுகமாகவும் இருக்கும் சுமையாகவும் இருக்கும்... நிறுத்தவும் தோன்றும்... ஆடிக்கொண்டே இருக்கவும் தோன்றும்....நிற்கும் வரை இந்த ஆட்டம்தான்...

Wednesday, September 23, 2009

என்றும் நானறியேன்

இன்றும் கூர் மழுங்காத கத்தியும்
ஓயாமல் ஓடும் சுவர்க்கடிகாரமும்
முகம் பார்த்திராத தாத்தாக்களை
நினைவுக்கு கொண்டுவரும்

வெற்றிலை இடிக்கும் பாத்திரமும்
ஓரமாகக் கிடக்கும் நார்க்கட்டிலும்
கதைகள் சொன்ன பாட்டிகளின்
நினைவுகளை அள்ளி வருகின்றன

விளாம்பழம் கண்டவுடன்
பிரியமாக வாங்கி வைத்து
மறக்காது கொடுத்தனுப்பிய
சின்ன அத்தையின் நினைவு

தோட்டத்து மலர்கள் முதற்கொண்டு
கருப்பட்டி மிட்டாய் இலந்தை வடை
என்று சின்ன சின்ன விஷயங்களும்
எண்ணிலா இன்னும் பல விஷயங்களும்
அன்பைப் பொழிந்த மாமாவின்
நினைவுகளால் மனதை நெகிழ்த்தும்

என்றும் நானறியேன்...
என்னை நினைவுறுத்த
என்ன இருக்கும் என்று!!!

Thursday, September 17, 2009

பால் சோறும் பக்கடாவும்

"இன்னிக்கு உங்க வீட்ல என்ன டின்னர்?" - இந்த கேள்விக்கு "ரொம்ப சிம்பிள்" என்று சற்றே மழுப்பலுடன் புன்னகைப்பேன். பதில் சொன்னால் , "அது உங்க குழந்தைகளுக்கு... உங்களுக்கு?" என்று கேள்வி வரும். பால் சோற்றின் ருசி அறியாதவரிடம் பேசி என்ன பயன்? அதன் பிறகும் தொடரும் கேள்விகள்..

"எப்படி சாப்பிடுவீங்க? சர்க்கரை போட்டா?"
"இல்லை. உப்பு சேர்த்தே தான். சிலர் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுவாங்க. அவங்க வழக்கம்"
"எப்படி சாப்பிடுவீங்க? நான் கேள்விப்பட்டதே இல்லை. குழந்தைகளுக்கு தான் கொடுப்பாங்க"
"எங்க ஊர்ப்பக்கம் அப்படி தாங்க"
"சும்மா கதை விடாதீங்க... வீட்லனு சொல்லுங்க... ஊரே சாப்பிடுமா? "


என்ன சொல்வேன்? "பால்சோறும் பக்கடாவும் வேலாயுதம் கடையில் விற்கப்படுவதாகவும் ஏழு மணிக்குள் காலியாவதாகவும் நான் கேள்விப்பட்டதையா? இரவு நிச்சயம், மறுநாள் திருமணம் என்ற வழக்கம் ஆதலால் நிச்சயதார்த்த இரவு உணவில் "பால்சோறும் பக்கடாவும்" ஸ்பெஷல் என்பதையா? திருமணப்பேச்சுகளின் ஒன்றில் "அமெரிக்காவில் இருந்தாலும் என் பையனுக்கு நைட் பால்சோறு சாப்பிட்டாகணும்" என்று காதில விழுந்த பேச்சையா?

அதென்னவோ இந்த பால்சோறு இல்லாவிட்டால் எனக்கு இரவு உணவு உண்ட திருப்தி இராது. இதே பால்சோறு எனக்கு பகலில் பிடிக்காது. சென்னையில் வந்து விடுதியில் தங்கிய பொழுதுதான் பால்சோறின் அருமை தெரிந்தது. சாம்பாரும், இரசமும் (இரண்டும் கிட்டதட்ட ஒண்ணுதான்) கண்டு பெருமூச்சு விட்டு சில இரவுகள் பழத்துடனோ வெளியே சாப்பிடும் ஸ்நாக்சுடனோ முடிந்துவிடும். வெந்நீர் வைக்க மட்டும் என்று ஸ்டவ்வுக்கு விடுதியில் அனுமதி கிடைத்த பொழுது, நைசாக பால் வாங்கி காய்ச்சி பால்சோறு உண்டபொழுதுதான் மனம் நிறைவுற்றது (விடுதி மக்கள் ஓவர் ஆர்வமாகி ஒரு நாள் பாகற்காய் பொறியல் பண்ண, இதையும் போடு என்று ஒருத்தி "ஆஞ்சநேயர் கோயில் வெண்ணெய் பிரசாதம்" சேர்க்க, கமகம என்ற வாசனை சூப்பர்வைசரை ஈர்த்து, ஸ்டவ் வைக்க தடை வந்தது வேறொரு விஷயம்)

பால்சோற்றுடன் ஊறுகாய், புளிக்குழம்பு என்று எல்லாம் ஒத்துப்போனாலும் பக்கடா (அதுவும் ஊர்ப்பக்க பக்கடா ) தான் "ஏ" க்ளாஸ் காம்பினேஷன். சமீப காலத்தில் இரவு அரிசி உணவு சாப்பிட்டால் எடை கூடுகிறது என்று எனக்கு நானே பால்சோறுக்கு "தடா" போட்டுவிட்டேன். குழந்தைகளுக்கு ஊட்டி விடும் பொழுதெல்லாம் நாவூறும். என்றாலும் ஊரில் இருந்து பக்கடா வந்துவிட்டால் எனது இரவு உணவு "பால் சோறும் பக்கடாவும்" தான்.

டிஸ்கி: "என்ன டின்னர்" என்று கேட்டவர்கள் எவரும் டின்னருக்கு வர விருப்பப்படுவதில்லை :-)

Tuesday, September 15, 2009

"என் வானம்" வந்த கதை

"என் வானம்" வந்த கதை சொல்லச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார் தீபா. ஆங்காங்கே பதிவுகளில் சொன்ன கதை தான் என்றாலும் நினைவுகள் என்றுமே "நினைத்தாலே இனிக்கும்".

வாசிப்பை அறிமுகப்படுத்திய பெற்றோர் தான் என் எழுத்துக்கு அடித்தளம் அமைத்தவர்கள். கட்டுரைப் போட்டிக்கு அப்பாவிடம் கேட்க, அவர் லைப்ரரிக்கு அழைச்சுட்டு போய், படிச்சு எழுதுனு சொல்ல, நானும் அங்க இங்க புரட்டி எழுத... பரிசு கிடைக்க... ஆரம்பிச்சது காகிதங்களுக்கு வேட்டு. வெத்து டைரி எல்லாம் என் கையெழுத்தால நிரம்புச்சு... யாரும் படிக்கலைங்கறது வேற விஷயம். சந்தோசம்னாலும் சோகம்னாலும் அந்த டைரிகளுக்குள் புதைந்து பழைய பேப்பர் கடையில் புகுந்துவிடும். இது ரொம்ப நாள் போச்சு...

அப்புறம்... கல்யாணம் பண்ணிட்டு ஆஸ்திரேலியா போனேன். அங்க இருந்து என் தோழிக்கு மின்னஞ்சல் அனுப்ப, அவள் "என்ன அழகா கோர்வையா எழுதற..." என்று பின்விளைவுகளை யோசிக்காமல் கூற, அடிமனதில் "ஆகா... நாம் எழுதறதையும் நல்லா இருக்குங்கறாங்களே!!!" என்ற எண்ணம் விழ ஆரம்பித்தது. இதுக்கு நடுவில் "சிட்னியில் வசந்தம்" என்று ஒரு கவிதையை நான் இணையத்தில் போட... நல்லா இருக்குனு இரண்டு பேர் மின்னஞ்சல் அனுப்ப... அந்த கவிதையைப் பாதுகாக்க மறந்து , இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன். இந்த தேடல் தான் என் வானத்தை உருவாக்கியது.

எங்க வீட்ல ஒரு பொருளை வச்சா "வைக்கப்போரில ஊசி தேடற" மாதிரி. யாழ் பிறந்திருந்த சமயம் கொஞ்ச நாள் ப்ரேக் எடுத்திருந்தேன். குழந்தைகள் பற்றி கவிதையை எப்பவும் போல ஒரு நோட்ல எழுதி வச்சிருந்தேன். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பத்திரமா வச்சிருக்கணும்னு வைக்கறது எல்லாம் கண்டிப்பா இருக்காது இல்லையா? என் பொஸ்தகம் மட்டும் தப்புமா? இதை எப்படி பத்திரமா வச்சிக்கிறதுனு நான் யோசிக்கற நேரம் முல்லை தன்னோட "சித்திரக்கூடத்தை" தெரியாமல் என் கண்ல காட்டிட்டாங்க...

ப்ளாக் எழுதறதுனு முடிவு பண்ணினேன். "சித்திரக்கூடம்" மாதிரி அழகான பெயர் தேடினேன் ... ஒண்ணும் அகப்படலை. என் நிலவுகள் பத்தி எழுதற எண்ணம் என்பதால் "என் வானம் - என் எண்ணங்கள்" என்று 2006-ல் ஆரம்பிச்சேன். என் வானத்தை "நிலவுகள்" "சூரியன்" என்று அமைத்தேன். ஈ-கலப்பையில் தமிழ் தட்டச்சு செய்ய, தமிழ் மணத்தில் இணைக்க என்ற அறிமுகம் எல்லாம் முல்லை தான். பின்னூட்டம் காண மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எனக்கு பின்னூட்டத்திற்கு நன்றி சொல்லவோ, பின்னூட்டம் இடவோ தெரிந்திருக்கவில்லை. மெல்ல அனுபவங்கள், எழுதிய கதைகள், பாட்டி சொன்ன கதை என்று பதிவு செய்தேன். கவிதைகளை "நட்சத்திரங்களாக" வானத்தில் பதித்தேன். அப்பொழுது லேபிளுக்கும் தலைப்புக்கும் எனக்கு வித்யாசம் தெரியாது... பின்பு தெரிந்து லேபிள் போட ஆரம்பித்தேன்... அடிக்கடி Save செய்யும் பொழுது "Save as Unicode" செய்ய மாட்டேன். அதனால் எழுதனது எல்லாம் "நீரில் எழுதிய எழுத்தாக " மாயமாகிடும்.

அதன் பிறகு அவ்வளவு சுறுசுறுப்பு இல்லை. "கழுதை கெட்டால் குட்டிச்சுவர்" என்று, என் வானத்தையும் தமிழ்மணத்தையும் மறந்து பூமியில் நடமாடிக்கொண்டிருந்தேன். மீண்டும் சுறுசுறுப்பாவதற்கு ஒரு நட்சத்திரம் தேவைப்பட்டது. முல்லை தமிழ்மணத்தில் நட்சத்திரமாக மின்னுவதைக் காண வந்த நான், மெல்ல மெல்ல தமிழ்மணத்துடன் ஒன்ற ஆரம்பித்தேன். எதையாவது எழுதி "முல்லை இதைக் கொஞ்சம் ரெவ்யூ பண்ணிக் கொடு" என்று டார்ச்சர் பண்ணிவிட்டு அப்புறம் தான் பதிவுலகத்தை டார்ச்சர் செய்வேன். வர்ற ஒண்ணு ரெண்டு பின்னூட்டத்துக்கு வானத்துக்கு குதிப்பேன். அப்புறம் நானே முல்லை மேல பரிதாபப்பட்டு டார்ச்சரைக் குறைச்சுட்டேன்.

சில சமயம் என்னத்துக்கு எழுதிட்டு, யாராவது சிரிக்கப் போறாங்க என்று யோசிப்பேன். அப்பொழுதெல்லாம் ஃபாலோ பண்ணி ஊக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள் ஜீவன், ஆயில்யன் , அமித்து அம்மா எல்லாம். பின்னூட்டம் வழியாக இராமலஷ்மி மேடம், வேணு வேணாம் எல்லாம் நல்ல ஊக்கம் அளித்தார்கள். மெல்ல மெல்ல இன்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஊக்கமளிக்கின்றனர்.

நடுவில் இரண்டு நாள் ப்ளாகில் login பண்ண இயலவில்லை. என்ன என்று தவித்த பொழுது ஆயில்யன் மற்றொருவருக்கும் இப்படிதான் ரெண்டு நாள் வேலை செய்யவில்லை, அப்புறம் சரியாகிடுச்சு, உங்களுக்கும் ஆகும் என்று சாட்டில் தைரியம் கொடுத்தார். கவலை மறந்து இருக்க இரண்டு நாளில் சரியானது. நண்பர் ஜமாலின் பதிவால் Import/Export" blog தெரிந்து கொண்டேன். "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு". நான் கற்றுள்ளதோ கைமண் அளவு இல்லை, மணல் துகள் தான் என்பது போல் இன்னும் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது. ஒரு கெட்ஜட் போடுவது என்பது இன்றும் எனக்கு பெரிய விஷயம் தான். எந்த டவுட் என்றாலும் அருகில் முல்லை இருக்கிற தைரியமோ? வலைப்பூ குழுக்களில் சேர, ஜி-டாக், லே-அவுட் என்று எல்லாமே முல்லை ட்யூஷன் தான்.

வலைப்பூ நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதோ பார்த்தது, படித்தது, கேட்டது, அனுபவித்தது என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள இதயம் துடிக்கிறது. மனதை ஊக்கப்படுத்தும் அங்கீகாரத்தை அள்ளி அள்ளி வழங்குபவர்கள் வலைப்பூ நண்பர்கள் அல்லவா?
என் வானத்தை தொட்ட ஒவ்வொருவர் வலைப்பூவிற்கும் ஒருமுறையேனும் சென்று பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இட வேண்டும் என்பது என் ஆசை. சில முறை செய்துள்ளேன். பதிவெழுதுவதும், பின்னூட்டமிடுவதும் ஆணிகளுக்கும் கடப்பாறைகளுக்கும் இடையில் கிடைக்கும் சில சைக்கிள் கேப்புகள் என்பதால் பல முறை அது சாத்தியப்படுவதில்லை. என்றாலும் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தும் தோழ/தோழியருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் எழுதாதவர்கள் உங்கள் கதையையும் பதிவில் சொல்லுங்கள்... கேட்போம்... இரசிப்போம்...பதிவுலகம் பதிவுகள் போடுவதற்கே!!!!

Wednesday, September 9, 2009

என்னைப் பற்றி இன்னும் கொஞ்சம்...

நண்பர் "அரங்க பெருமாள்" அவர்கள் என்னை அழைத்திருக்கிறார். அழைப்பிற்கு எனது நன்றிகள்.

கொஞ்சம் ஆணி எனவே தாமதம். மன்னிக்கவும்.

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.


1. அன்புக்குரியவர்கள்: சுற்றமும், நட்பும்
2. ஆசைக்குரியவர்: அன்புக் கணவர்
3. இலவசமாய் கிடைப்பது: அறிவுரை
4. ஈதலில் சிறந்தது: ஈதலே சிறந்தது
5. உலகத்தில் பயப்படுவது: உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவருக்கு
6. ஊமை கண்ட கனவு: சுவாரசியம்
7. எப்போதும் உடனிருப்பது:மனசாட்சி
8. ஏன் இந்த பதிவு: அரங்கபெருமாள் அவர்களின் அழைப்பால்...
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: மழலைச் செல்வம்
10. ஒரு ரகசியம்: ************
11. ஓசையில் பிடித்தது: மழலையின் சிரிப்பு
12. ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு
13. (அ)ஃறிணையில் பிடித்தது:வீடு... நுழைந்ததும் நிம்மதியைக் கொடுப்பதால்

1. A – Available/Single? No
2. B – Best friend? : to whom I can openup
3. C – Cake or Pie?: Cake
4. D – Drink of choice? : Fresh Juice
5. E – Essential item you use every day? :Spectacles
6. F – Favorite color? : Pink
7. G – Gummy Bears Or Worms?: ???
8. H – Hometown? - Sivakasi
9. J – January or February? ???
10. K – Kids & their names? Nanthini & Yazhini
11. L – Life is incomplete without? – Love
12. M – Marriage date? 27 Nov
13. N – Number of siblings? 1 brother
14. O – Oranges or Apples? Apple pieces and orange juice
15. P – Phobias/Fears? Anxiety
16. Q – Quote for today? : Where there is a will there is a way
17. R – Reason to smile? : No Reason needed
18. S – Season? Rainy
19. T – Tag 4 People? ஜீவன், அமித்துஅம்மா (ஹையா...இரண்டு பேரையும் முந்திட்டேன்), ஆயில்யன், நிஜமா நல்லவன்20.
U – Unknown fact about me? Let me start searching...
21. V – Vegetable you don't like?
22. W – Worst habit? Anger
23. X – X-rays you've had? Neck, Hand
24. Y – Your favorite food? Mom's cooking

Thursday, August 27, 2009

இப்பொழுதெல்லாம்...

எப்பொழுது தொலைந்துபோனது
அந்த குழந்தைத் தனம்?
இளமை துள்ளலுடன்
நுழைந்த பொழுதோ?

எப்பொழுது தொலைந்துபோனது
அந்த இளமை துள்ளல்?
பொறுப்புகளின் சுமை
கூடிப் போனபொழுதோ?

என்றாலும் ...
இப்பொழுதெல்லாம்...

சொப்புகளில் உன்னுடன்
சமைக்கும்பொழுது
குழந்தைத்தனம் என்னுள் இருக்கிறது

என்னைப் பிடி என்று
நீ ஓடும்பொழுது
எனக்குள் இளமை துள்ளுகிறது

நன்றி மகளே!!!
குழந்தைத்தனமும் இளமையும்
தொலையவில்லை...
மறைந்துள்ளது என்று
எனக்கு காட்டிக் கொடுத்ததற்கு....

(ஒரு மொக்கைக்கும் தேடலுக்கும் வித்திட்ட முல்லைக்கு நன்றி :-))

Wednesday, August 26, 2009

And,Now...

முட்டையிடாத ஒரு நாட்டுக்கோழி ஒன்று, என்னிடம் இருந்தது. பள்ளிவிட்டு வந்ததும் அது குப்பை கிளறும் அழகை வேடிக்கை பார்ப்பேன்.

வெகுசுவாரசியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த கோழி ஒருநாளில்...
அதனுடன் நான் சப்புக் கொட்டிக்கொண்டிருந்த நாட்டுக்கோழி பிரியாணியும்!

(டெடிக்கேட்டட் டு ஆச்சி)

Tuesday, August 25, 2009

திருநாள்

அன்பு மகளே!!!
சில வருடங்களாக
ஒவ்வொரு வருடமும்...

கிருஷ்ண ஜெயந்தி
வந்து கொண்டிருந்தது
உன் பாதம் பட்டபின் தான்
குழலோசை கேட்டது

விநாயகர் சதுர்த்தியில்
கொழுக்கட்டைகள் வெந்தன
நீ கேட்ட பொழுதுதான்
அவை பூரணமாயின

தீபாவளி வாணங்களுடன்
வெடித்துக் கொண்டிருந்தது
நீ புன்னகைத்த பொழுதுதான்
வாணங்களின் வண்ணங்கள்
எனக்குத் தெரிந்தன

நினைவுகளின் ஏக்கத்துடன்
வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருந்தது

என் பால்யத்தை நினைவுறுத்த..
அம்மா அப்பா அன்பை
மீண்டும் காணச் செய்ய...
என்று உன்னால் தான் இதோ!!!
வாழ்க்கையை வாழ்கிறேன்
ஒவ்வொரு நாளும் திருநாளாக...
கைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...

Tuesday, August 18, 2009

அப்பாவின் நிழற்படம்

அவன் கையில் இருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். இனி அப்பாவைப் படத்தில் மட்டும் தான் காண முடியும் என்ற எண்ணம் மனதைக் கலக்கியது. ஊரில் வேலை பார்த்தபொழுதும் சரி, ஊரை விட்டு வந்த பொழுதும் சரி அவனுக்கு அவர் அமைதியாக உறுதுணையாக இருந்தார். நடுவில் வேலையை விட்டு ஏதோ படித்தபொழுதும் கேள்வி கேட்காது செலவுக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு நாள் ஏதோ துர்க்கனவு என்று அவனைக் காண பஸ்ஸில் வந்து விடியற்காலையில் நின்றது நினைவிற்கு வந்தது. "எனக்கு ஏன் அப்படி ஒன்றும் தோன்றவில்லை" என்ற கேள்வி உதித்தது. இது ஒரு துர்க்கனவாக மறைந்திடாதா என்ற ஏக்கம் சூழ்ந்தது. அம்மாவை நினைத்து மனதில் பாரம் ஏறியது.

படத்தில் அப்பாவின் முத்திரைச் சிரிப்பு பதிந்திருந்தது. "ராஜா" என்று அப்பா அழைப்பது போல் இருந்தது. நடராஜன் என்ற அவனை எல்லோரும் நட்டு, நட்ராஜ் , ராஜ் , ராஜா என்றும் அழைப்பார்கள். என்றாலும், அப்பா அழைக்கும் "ராஜா" எத்தனை தனித்தன்மையுடையது என்று இப்பொழுது தோன்றியது. அப்பாவின் அருகில் நிற்க வேண்டும் போல் இருந்தது.

"கவி, இந்த போட்டோவை பெரிசா பண்ணி ஹால்ல மாட்டப் போறேன்", என்றான். அவள் சரி என்பது போல் தலையை ஆட்டினாள். உடனே நெகடிவ்வை எடுத்துக் கொண்டு கிளம்பினான். குடும்பத்துடன் பல படங்கள் இருந்தாலும், பெரிது படுத்தும் அளவுக்கு எதுவும் தேறவில்லை. எதற்காகவோ எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் படம் மட்டும் தான் கொஞ்சம் பெரிது படுத்தும் அளவுக்கு இருந்தது.

கடையில் அவன் எதிர்பார்த்த அளவு பெரிது பண்ண ரிசொல்யூஷன் இல்லை என்றார்கள். அவர்கள் சொன்ன அளவிற்கு அடுத்த பெரிய அளவு சொன்னான். தேவைப்பட்டால் கிராபிக்ஸில் சில தொடுதல்கள் பண்ணுவதாகக் கூறினார்கள்.

மறு நாள் படத்தை வாங்கிப் பார்த்தபொழுது நன்றாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது "ரிசொல்யூஷனுக்காக" சில இடங்களில் டச்சப் செய்திருந்தது தெரிந்தது. மீசை முழுமைபெற்று அப்பா சற்று இளமையாகத் தெரிந்தார்... அவனுக்கு வேறு யாரையோ பார்ப்பது போல் இருந்தது. "இல்லை கவி...அப்பாவைப் பார்க்கிற மாதிரி இல்ல... அந்த படத்தில் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. நான் போய் மாத்திட்டு வந்திடறேன்", என்று கிளம்பிச் சென்றான்.

சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவனிடம், "என்ன மாத்த சொல்லிட்டீங்களா?" என்றாள். "ம்... அவர்கிட்ட சொன்னேன்; அந்த படம் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. இது அப்படி இல்லை. அதே மாதிரி எந்த அளவுல நல்லா இருக்குமோ, அந்த அளவுக்கு பெரிசுப்படுத்த சொன்னேன். அவர் புரியுது தம்பினு சொல்லி நாளைக்கு வரச் சொன்னார்" என்ற பொழுது அவன் கண்கள் கலங்கி இருந்தன.

Monday, August 17, 2009

ஒரு திங்கட்கிழமை காலை

ஸ்வைன் ப்ளுவிற்க்காக ஒரு வாரம் பள்ளி விடுமுறை. விடுமுறையை மிக இனிமையாகக் கொண்டாடினார்கள் குழந்தைகள். எல்லா அன்புச் சகோதரிகளும் என்று எங்கள் வீட்டில் ஐந்து குழந்தைகள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். நடுவில் எங்கள் டார்ச்சரையும் நாங்கள் விடவில்லை... நேரத்திற்கு எழுப்பி எப்பொழுதும் போல் பல் தேய்த்தல், குளியல், காலை உணவைக் கொடுத்துவிட்டு "என்னவோ செய்ங்க" என்று ஆபீஸ் கிளம்பினோம். முத்தாய்ப்பாக சனிக்கிழமை நந்தினியின் பிறந்த நாள் கொண்டாட்டம். எல்லா குட்டீஸும் எஞ்சாய் தான்....

நேற்றுவரை ஆறு மணிக்கு எழுந்தவர்களுக்கு இன்று தான் தூக்கம் தூக்கமாக வருகிறது. பள்ளிக்கு பிறந்த நாள் உடை போட வேண்டும் என்ற நினைவூட்டியவுடன் துள்ளி எழுந்து நந்தினி எட்டு மணி வேனுக்கு ஏழரைக்குத் தயார். யாழினி "எனக்கு தூக்கமா வருது... ராத்திரி சரியாவே தூங்கலை" என்ற வழக்கமான பள்ளி செல்லும் நாளுக்கான மனதுடன் விழித்தாள்.

எனக்கு மனதுள் ஸ்வைன் ப்ளூ உறுத்திக் கொண்டிருந்தது. அதுவும் சின்னப் பெண் கவனமாக இருக்க வேண்டும் என்று கவலை.

"டாய்லெட் எல்லாம் போனால் கையை நல்லா கழுவணும். சரியா"
"இது நாங்க எப்பவும் செய்யறது தான் அம்மா..."
"சாப்பிடறதுக்கு முன்னாடி நல்லா கை கழுவணும். சரியா?"
மெலிதான புன்னகை. "எப்பவும் அப்படி தான் அம்மா..."
"தும்மினால் கர்ச்சீப்ல நல்லா மூக்கையும் வாயையும் மூடிக்கணும்..."
இப்பொழுது மெலிதான புன்னகையும் குறும்பான பார்வையும்...
"மத்தவங்க தும்மினாலும், மூக்கை மூடிடு"
இப்பொழுதும் மெலிதான புன்னகையும் குறும்பான பார்வையும்...
"உன் மூக்கை, தும்மினவங்க மூக்கை இல்லை" என்ற அவள் தந்தையின் குறும்பில் வாய் விட்டு சிரித்தாள்.

ம்... மெலிதான கவலை இருக்கின்றது. ஆனால் , பாதுகாப்பு முறைகளைச் சொல்லித் தருவதைத் தவிர என்ன செய்ய இயலும்? இன்று என்று வானமும் பொத்துக் கொண்டு கொட்டுகிறது!!!

இறைவா.... ஸ்வைன் ப்ளூ மேலும் பரவாமல் பார்த்துக்கொள்!!!!

Saturday, August 15, 2009

எங்கள் இளவரசிக்குப் பிறந்தநாள்

இளம் ரோஜாவின் நிறத்தோடு, கண்விரிய நாவை நீட்டி மலர்ந்த கண்களுடன் பார்த்த குழந்தையை அரை மயக்கத்தில் கண்ட நினைவு இன்னும் பசுமையாக....வண்ணமயமான உலகில் நான் நுழைவதை உணர்த்தினாள் அந்த இளவரசி. சட்டென்று அவள் என் உலகமானாள்...இன்று விரிந்து கொண்டிருக்கிறது அவள் உலகம்... பரிவு காட்டும் தாயாக, கொஞ்சி விளையாடும் குழவியாக, ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கச் செய்யும் பொறுப்பான மகளாக, நற்குணங்களின் வெளிப்பாட்டில் போதிக்கும் ஆசானாக... பெண்ணே!!! என்ன தவம் செய்தேனோ உனை நான் ஈன்றிடவே!!!!

எங்கள் இளவரசி...
சின்ன சின்ன பூ பாதம் பதித்து
பூவுலகில் பதித்த நாள்

அவள்...
கண்மலர்ந்து எங்களை
முகம் மலர வைத்த நாள்

அவள்...
அழுகையின் ஒலியிலே எங்கள்
சிரிப்பொலி கேட்ட நாள்

வாழ்வின் அர்த்தங்களை
உணரத் தொடங்கிய நாள்
மீண்டும்...
அழகாக மலர்கிறது
உறவுகளின் , நட்புகளின்
வாழ்த்துக்களின் வாசத்துடன்...

எப்பொழுதும் போல் மாமாவின் நினைவும் சேர்ந்து கொள்கின்றது. உடல் நலக் குறைவால் ஒரு முறை தவிர, இவளின் அனைத்து பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் அவர் இருந்தார். சென்ற ஆண்டில் இருந்து இல்லாமல் போனது மனதைக் கனக்கச் செய்கின்றது.

சென்ற ஞாயிறு ப்ராத்மிக் பரீட்சைக்கு கிளம்பியவளிடம் "சாமியை வேண்டிக்கொள்" என்றவுடன் "ஷோகேஸ்" முன்பு நின்றாள். "சாமி ரூமுக்கு போ" என்று சொல்ல வந்தவள் சட்டென்று உணர்ந்தேன் அவள் மாமாவின் படத்தின் முன் நிற்பதை. அன்றே, செம்பருத்திப் பூவை ஆசையுடன் கொடுத்த குட்டிப் பெண்ணிடம் "சாமிக்கு வை" என்ற பொழுது அவளும் ஷோகேஸில் மாமா படத்தில் பூ வைத்த பொழுது மனம் நெகிழ்ந்தது. இவர்களை அன்பும் ஆசையுமாக மார் மீதும், தோள் மீதும் சீராட்டி வளர்த்தவர் இறையாக நின்று அவளை வாழ்த்துவார் என்ற நம்பிக்கையுடன் நந்தினி என்றழைக்கப்படும் எங்கள் இளவரசிக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

Wednesday, August 12, 2009

கெட் மீ த ஃப்ளோரா பவர்




குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஏதேதோ விளையாட்டுக்கள்... பேச்சுக்கள்...சின்ன சின்ன சண்டைகள்... சுவாரசியமாக இருந்தது. தொலைக்காட்சியில் ஃப்ளோரா பென்சில் பற்றிய விளம்பரம் வந்தது. குட்டிப் பெண் கூறுகிறாள் :

"நானும் என் ஃபிரண்ட்ஸும், கெட் மீ த ஃப்ளோரா பவர்-னு சொன்னோம், ஆனால் பார்பி வரலை".
"எதுக்கு கூப்பிட்டீங்க"
"எழுதறது கஷ்டமா இருந்தது அதான்"
"ஓ... கிவ் மீ த ஃப்ளோரா பவர் சொன்னால் பார்பிஸ் வரமாட்டாங்களா?"
"அதெல்லாம் உண்மை கிடையாது அம்மா... பொய்"


ஒரு கணம் அவை உண்மையாக இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. மாயாஜாலக் கதைகள் இனிமையானவை. கற்பனை வளத்தைத் தூண்டிவிடுவதோடு ஒரு அழகான உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். அங்கு கெட்டவரைத் தேடி நல்லவர்கள் செல்வார்கள். நாமும் அந்த நல்லவருள் ஒருவராவோம். தேவதைகளுடன் விளையாடுவோம், அவர்கள் நமக்கு உதவுவார்கள் அல்லது நாம் அவர்களுக்கு உதவுவுவோம், நிலவில் கால் வைப்போம், மேகத்தில் மிதப்போம், நட்சத்திரங்களிடம் சக்தி தேடுவோம், தங்க நதிகளும், வெள்ளி ஓடைகளும் குறுக்கிடும், விலங்குகள் நட்புடன் உதவும், தாவரங்கள் பேசும் ... இன்னும் பல அதிசயங்கள் நம் முன் மலரும்.



இன்றும் விக்ரமாதித்யன் கதைகளும், மதன காமராஜன் கதைகளும், பஞ்ச தந்திர கதைகளும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. சிறுவர்மலர் தொடர் கதைகளும், தங்கப் புதையல் போன்ற படக்கதைகளும் நினைவிற்கு வந்து மனதில் ஒரு ஏக்கம் உருவாக்குகின்றன.

சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்தது ஹாரி பாட்டர் கதைகள். அந்த கதையின் கரு மிகவும் பிடித்தது. ஹாரி பாட்டர் "இருள் அரசன்" வால்டிமார்ட்டைக் அழிக்கப் பிறப்பான். இருவரும் கிட்டதட்ட ஒரே சக்தியை உடையவர்கள். ஹாரியை வால்டிமார்ட்டிடம் இருந்து ஒன்று தான் வேறுபடுத்தும். அது... அன்பு....




அதில் வரும் ஒரு உருவகம் "டெமெண்ட்டர்". "டெமெண்ட்டர்" நம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உறிஞ்சி நம்மைப் பைத்தியமாக்கும் வல்லமை உடையவை. நம்மைச் சுற்றி சில "டெமண்ட்டர்கள்" உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. டெமெண்ட்டர்ஸை எதிர்க்கும் மாயம் "மகிழ்ச்சி, நம்பிக்கை, பாஸிடிவ் மனம்" போன்றவற்றை உருவாக்கும் மந்திரமே. அழகான கருத்து.

மற்றொரு உருவகம் "ரூம் ஆஃப் ரிக்கொயர்மெண்ட்ஸ்" - தேவைகளுக்கான அறை. மறைந்து நிற்கும் அவ்வறையின் வாயிலில் நாம் என்ன வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதுவாக அந்த அறை நமக்கு முன் திறக்கும். "நினைப்பது தான் நடக்கும்" என்ற கருத்தைப் போல.

இப்படி மாயா உலகில் சில நனவுலகமும் மிகைப்படுத்தப்பட்டு வரும். நூலகம் சென்றால் இப்பொழுது எனக்கு ஓரளவுக்கு நந்தினிக்கு ஆங்கிலப் புத்தகங்கள் தேர்வு செய்ய இயல்கின்றது. "Daisy Meadows" தேவதைகளும், "Secrets of Droon" மாய உலகும், "goosebumps" திகில் உலகமும் அவள்முன் மாயாஜாலங்கள் செய்கின்றன. இவை எனக்கு அறிமுகமில்லாத புத்தகங்கள். நந்தினிக்கான தேடலில் கிடைத்தவை. தமிழ் அவளுக்கு பிடிக்கும் என்றாலும், எழுத்துத் தமிழில் கதைகள் படிக்க சிறிது சிரமப்படுகிறாள். மெல்ல மெல்ல அவளே வாசிக்க விருப்பப்படுவாள் என்று நம்பிக்கை உள்ளது.

வாசிப்பு இப்பொழுது அவளது கற்பனை வளத்தைத் தூண்டுகின்றது. இப்பொழுது அவள் நிறைய மாயாஜாலக் கதைகள் எழுதுகிறாள். பிடித்த நீதிகள் கூறும் கதை எழுதுகிறாள். அவை எனக்கு மிகவும் பிடிக்கின்றன. அவற்றை அவள் ப்ளாக்கில் போடத் தான் எனக்கு நேரமில்லை.

ம்... நினைத்துப்பார்த்தால் கையில் அடங்கிய சின்னக் குழந்தை , கதை கேட்டு வளர்ந்த குட்டிப் பெண் இன்று தோள் வரை வளர்ந்து கதை சொல்வதே காலத்தின் மாயாஜாலமாகத் தான் தெரிகிறது.

"கெட் மீ த ஃப்ளோரா பவர்", இவ்வுலகில் எல்லா குழந்தைகளும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து பால்யத்தை அனுபவிக்க....

Tuesday, August 4, 2009

இறைவனுக்கு நன்றி

கண்ணாடி நொறுங்கி முகமிழந்து நின்ற காரைச் சலனமின்றி பார்த்தேன். எனக்கே என் குணம் வியப்பாக இருந்தது. முதன்முதலில் கார் எங்கள் வீட்டுக்கு வந்தது நினைவில் நிழலாடியது. காரை என் கணவர் வீட்டு வாசலில் நிறுத்த முயன்ற பொழுது சுவரில் பட்டு சிறு கீறல் விழுந்தது. அதற்கு நான் செய்த ஆர்ப்பாட்டத்தில் சில நாட்களுக்கு என் தம்பி காரைத் தொடவே இல்லை. என் தோழி, "காரும் ஒரு பொருள். பழசாகும் , சேதமாகும் என்பதைப் புரிந்து கொள்", என்று கூறிய பொழுது அதுதான் நிதர்சனம் என்று உணர்ந்தேன். அதன் பிறகு காருக்கு ஏற்பட்ட காயங்கள் என்னை பாதிப்பதில்லை.

கார் வாங்குவது என்பது என் கனவிலும் இருந்தது கிடையாது. அது ஒரு ஆடம்பரச் சின்னமாகவே வெகு நாட்களுக்கு என்னுள் இருந்தது. இரு குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள் என்று வெளியே செல்லும் தேவை ஏற்பட்ட பொழுது, கார் அவசியமானது. குழந்தைகளை கவனிதுக்கொள்ள பெரியவர்கள் வீட்டில் இருக்கமுடியாத சூழலில், கிட்டதட்ட எனது இரு வருட வாழ்க்கை காரைச் சார்ந்தே இருந்து வந்தது. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பெற்றோர் வீட்டிற்கு வர அல்லது, பெற்றோர் வீட்டில் பள்ளி முடிந்து குழந்தைகளை விட என்று அதன் ஓயாத அலைச்சலில் தான் குழந்தைகள் பற்றிய கவலை இன்றி என்னால் அலுவலகத்தில் வேலை பார்க்க முடிந்தது. காருக்கும், ஒழுங்காக வேலைக்கு வந்த ஓட்டுநருக்கும் நன்றிகள்.

பல அடிகள் பட்டிருந்தாலும் எப்பொழுதும், காருக்கு தான் சேதம்... இந்த கடைசி நிமிடம் வரை. சென்ற வாரம் ஓர் இரவு, என் உறவினர், போக்குவரத்து நிறைந்த சாலையில், இரு சக்கர வாகனம் வழுக்கிவிட, கீழே விழுந்து மயக்கமானார். அவரை மருத்துவமனையில் சேர்த்து நாங்கள் செல்லும்வரை காத்திருந்த முன்பின் அறியா மனிதருக்கு நன்றிகள். இறைவன் அருளால் சிறுகாயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது.

மறுநாள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு காரில் செல்லும் வழியில், ஓட்டுநர் முன்னால் சென்ற லாரியின் "சடன் பிரேக்கிற்கு" ஈடு கொடுக்க முடியாது லாரியின் அடியில் காரை விட்டார். கார் அடியை வாங்கிக்கொண்டு , இறைவன் அருளால் உள்ளிருப்போரைக் காயமின்றிக் காப்பாற்றியது. ஓட்டுநர் சற்றே மெதுவாகச் சென்றிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த காரைப் பிரியும் நேரம் வந்துவிட்டது. அதன் புகைப்படம் ஒன்றும் இல்லை என்றும் தோன்றியது. ஒவ்வொரு நிகழ்வோடும் மறைந்த மாமாவின் நினைவுகள் வந்துவிடுகின்றது. அவர்தான் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துக்களும் அதிக பிரச்னைகளின்றி காத்தது போல் ஓர் உணர்வு. எத்தனையோ "இப்படி செய்திருந்தால்" இருந்தாலும், பிரச்னைகளைத் தாங்கும் வலிமை தந்த இறைவனுக்கு நன்றிகள்.

Wednesday, July 29, 2009

மண்வாசனை

மழைத்துளிகள்
மண்ணைக் கிளறின

மண்வாசனை
மனதைக் கிளறியது

காகிதக் கப்பல்
சுழன்று சுழன்று
மூழ்கிய காட்சி
நெஞ்சுள் சுழன்றது

தாரணிப் பாப்பாவின்
தொலைந்த கம்மல்
மழையோடு ஒதுங்கியது
மனதுள் வந்தது

மொறுமொறு முறுக்கும்
சூடான வடையும்
அம்மாவின் கைமணத்துடன்
வாசம் வீசியது

இப்பொழுதும்
அதே மழைதான்...
படகுகள் மிதந்து செல்கின்றன

வாசலில்...
மழை ஒதுக்கிய குப்பைகள்

கடையின் வாசத்துடன்
முறுக்கும் வடையும்...

மண்வாசனை ...
மறைந்து போனது

Sunday, July 26, 2009

நன்றி

கடந்த சில பதிவுகளை கிடைத்த நேரத்தில் அடித்து வைத்தேன். நன்றி சொல்வதை நிதானமாக எழுத வேண்டும் என்று எண்ணினேன். எனவே இந்த தாமதம். ஆனால், கடவுளுக்கு அவசரமாக நன்றி சொல்லும் நேரம் ஒன்று வந்த பொழுது, சொல்லாமல் வைத்துள்ள நன்றிகளை உடனே சொல்லத் தோன்றியது.

மீண்டும் மீண்டும் என்றாலும் எவர் மனதையும் மலரச் செய்வது அங்கீகாரம். இம்முறை மூன்று பேரிடம் இருந்து கிடைத்துள்ள வெவ்வேறு அங்கீகாரத்திற்கு நன்றிகள். எனக்கு விருது கொடுத்து ஆச்சர்யம் அளித்துள்ளார் ஜீவன்.

நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தும் கிருஷ்ணப்பிரபு, சற்றும் எதிர்பாரா நேரத்தில் எனது "சுட்டி உலகம்" வலைப்பதிவிற்கு அதே விருதை அளித்துள்ளார்.

சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கும் புதுகைத்தென்றல் "நட்புக்கு மரியாதை" கொடுத்துள்ளார்.

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவர்கள் அனைவருமே எனக்கு வலைப்பூ வழி அறிமுகம் ஆனவர்களே என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. சமீபத்தில் வாரமலரில் கதை ஒன்று படித்தேன். உதவிக்கு பிரதிபலனாக தேவைப்படுவோருக்கு உதவுமாறு ஒருவர் கூற, அந்த உதவி சங்கிலியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த விருது கொடுக்கும் மகிழ்ச்சியும் அப்படியே!!! கொடுத்தவர்களுக்கு எனது நன்றிகள்.




சுவாரசியப் பதிவர் விருது 6 பேருக்குக் கொடுக்கவேண்டுமாம்.
இதோ...

புதுகைத்தென்றல் - பல வகை சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கும் இவர் பதிவில்
பூந்தளிர் - தீஷுவின் வளர்ச்சியும் குழந்தைகளுக்கு சுவாரசியமாக கற்றுக்கொடுக்க உதவும் முறைகளும் கொட்டிக் கிடக்கும் இவர் பதிவில்
நினைவின் விளிம்பில் - கவிநயா அவர்களின் எளிமையான இயல்பான எழுத்துக்கள் என்னை எப்பொழுதும் ஈர்க்கும்.
தமிழ் - தமிழின் சுவையை சுவாரசியமாக இவ்வலைத்தளத்தில் பதிவு செய்வார்
அரும்புகள் - சுட்டிகளுக்கான ஒரு சுவாரசியமான வலைதளம்
சிதறல்கள் தீபாவின் எழுத்துக்கள் எனக்கு மிகப் பிடிக்கும். மிகத் தெளிவாக அழகாக இருக்கும் இவரது பதிவுகள்



இனி "நட்புக்கு மரியாதை"

சந்தனமுல்லை - பதிவர் என்பதற்கு முன்பிருந்தே எனது தோழி
இராமலஷ்மி மேடம் - மின்னஞ்சல் வழியே மட்டுமே தொடர்புண்டு. அன்புடன் அவர் எனக்கு பல விதங்களில் ஊக்கம் அளித்துள்ளார்.
ஜீவன் - ஒவ்வொரு விருதும் இவரிடம் இருந்து பெறுவதில் எனக்கு மிக மகிழ்ச்சி.
அமிர்தவர்ஷினி அம்மா - வலை வழியாக மட்டுமே அறிந்து இப்பொழுது நன்கு அறிமுகமான நல்ல தோழி
அ.மு செய்யது - இவரது பின்னுட்டங்கள் நேரில் கூறுவது போல் இருக்கும். பின்னூட்டங்கள் வழி மட்டுமே அறிமுகம்.
நட்புடன் ஜமால் - யாருக்கு தான் இவர் நண்பர் இல்லை?
ஆதவா - சகோதரி என்று அழைத்து இவர் தனது விமர்சனங்களுடன் இவர் இடும் பின்னூட்டம் வழி மட்டுமே அறிமுகம். இந்தவார வலைச்சர ஆசிரியராக இருப்பதில் மகிழ்ச்சி.

ஆயில்யன் - அவ்வப்பொழுது வந்து கும்மி அடித்து கலகலப்பாக்குவதுடன் அடிக்கடி ப்ளாக்கர் பிரச்னைகளுக்கு எப்பொழுதும் ஆன்லைனில் இருந்து உதவுவார்.

"பூந்தளிர்" தியானாவும், "சிதறல்கள்" தீபாவும் வலை வழி அறிமுகமான நல்ல தோழிகள்

புதுகைத் தென்றலின் பதிவிலிருந்து :

"ரங்கா இந்த விருதை ஏற்படுத்த காரணமாக கூறியிருக்கும் காரணங்கள் மிக்க அருமை:

முதல் காரணம்: என்னால் இந்த பதிவுலகத்திற்கு எதாவது நல்லது செய்ய முடியுமா என்கிற ஏக்கம்.

இரண்டாவது காரணம்: நீங்கள் நான் எல்லாருமே இனி இந்த விருதை பார்க்கும்போது ஒரு நட்புணர்வும்,நம்பிக்கையும் வருமே
அதற்காக தான்.

மூன்றாவது காரணம் : பதிவுலத்தில் நிலவும் நம்பகமற்ற தன்மையை விலக்கவே இந்த விருது.

இந்த காரணங்களை முன்னிட்டே இந்த விருது உருவாக்கப்பட்டது.


இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.

2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.

3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.

4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.
அப்படின்னு ரங்கா சொல்லியிருக்காரு.

நீங்களும் உங்கள் நண்பருக்கு விருது கொடுத்து பெருமைப்படுத்துங்கள்"

Wednesday, July 22, 2009

சூரிய கிரகணமும் நம்மூரும் அல்ப சந்தோஷமும்....

என்ன தான் லைவா தொலைக்காட்சியில் காட்டினாலும், நாமே பார்த்தால் தான் ஒரு திருப்தி இல்லையா? இது அபூர்வமான நிகழ்வு, பத்து ரூபாய்க்கு கண்ணாடி காந்தி சாலையிலும், திருவான்மியூர் அருகில் திருவள்ளுவர் நகரிலும் கிடைக்கும் என்று செய்தித்தாளில் பார்த்தோம். விடுமுறையில் செய்தால் தான் முடியும் என்று ஞாயிறன்றே பிர்லா கோளரங்கம் சென்று விசாரிக்க "கண்ணாடி எல்லாம் எல்லை. புதன் கிழமை வாங்க, பார்க்க ஏற்பாடு ஆகி இருக்கும்" என்றார்கள். திருவள்ளுவர் நகரையும், பீச்சையும் சுற்றி சுற்றி வந்தோம், விசாரித்தும் பார்த்தோம் ... ம்ஹூம்... நம்ம ஊர்ல ஒரு விஷயம் தேடினால் கிடைக்குமா?

அலுவலகத்திலேயும் ஒருத்தரை ஒருத்தர் விசாரிச்சாச்சு... ம்ஹூம்... கண்ணாடி எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. நேற்றும் திருவள்ளுவர் நகரையும், பீச்சையும் சுற்றி சுற்றி வந்தோம்...விசாரித்தும் பார்த்தோம் ... ம்ஹூம்...சரி காலைல பார்க்கலாம்னு விட்டாச்சு.

தொலைக்காட்சி என்றால் குட்டீஸ் அதையும் ஒரு ஆவணப்படம் போல பார்க்காமல் போய்விடுவார்கள், கண்ணாடி வழியாகக் காட்டினால் பார்ப்பார்கள், மறக்க மாட்டார்கள் என்று ஒரு நப்பாசை தான். காலையில் எழுந்து மீண்டும் கடற்கரைக்கு ஓடினோம். குட்டீஸ் எல்லாம் வர மறுத்துவிட்டார்கள். சூரியனைப் பார்க்கக் கூடாதாம். திருவள்ளுவர் நகரையும், பீச்சையும் சுற்றி சுற்றி வந்தோம். ஆங்காங்கு மக்கள் இருந்தார்கள், ஏற்பாடுகள் எதுவும் கண்ணில் படவில்லை. வேறு வழி? பிர்லா கோளரங்கம் சென்றோம்.


ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. நிறைய பேர் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள். வரிசை வேகமாக நகருகிறது. ஆவல்... ஆவல்.... சிலர் கையில் கண்ணாடியுடன் வருகிறார்கள். ம்... நாமும் வாங்கி வீட்டில் குழந்தைகளைப் பார்க்கச் செய்யலாம் என்ற ஆசையுடன் நக்ர்ந்தால்... கண்ணாடி தீர்ந்து விட்டதாம்... தொலைநோக்கி வழியாகக் காண ஏற்பாடெல்லாம் இல்லை. வரிசையாக நின்று பாருங்கள் என்று மைக்கில் அறிவித்துக்கொண்டிருந்தவரிடம் கண்ணாடி கேட்டால் யாரிடமாவது வாங்கிப் பாருங்கள் என்றார். அவர் கையில் இருப்பதை மறக்காமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

ஓரிருவரிடம் கண்ணாடி கடன் வாங்கி கிரகணம் பார்த்தோம். மகிழ்ச்சியாக இருந்தது. அழகாக சூரியனை கரும் நிழல் ஒன்று மெல்ல மெல்ல கவ்விக் கொண்டிருந்தது. குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் என்ற ஆசை யாரிடமாவது கண்ணாடியைப் பறித்துக் கொள்ளும் ஆவலை உண்டு பண்ணியதால் போதுமென்று வெளியேறினோம். "ப்ரஸ்" என்று போட்ட காரில் ஒருவர் கண்ணாடியுடன் இருந்தார். கடன் வாங்கினோம்; மீண்டும் பார்த்தோம்... எடுத்து ஓடிவிடலாம் என்ற எண்ணத்தை அடக்கி "குட்டீஸ்க்கு காட்டணும் எடுத்துக்கொள்ளவா?" என்று வினவ.... அம்மாடி அவர் சரி என்று விட்டார். நன்றி நவின்று விட்டு... ஓடினோம்...ஓடினோம்... பைக் இருக்கும் இடத்திற்கு ஓடி, மீண்டும் மீண்டும் கண்ணாடி தந்தவரை வாழ்த்தி... வீடு வந்தோம். எங்கள் கண்மணிகளுக்கு கண்ணாடி வழியாக கிரகணம் காட்டினோம். கரும் நிழல் ஒன்று மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருந்தது. சூரியன் அழகாகத் தெரிந்தது. இனிய காலையை அழகாக்க உதவிய அந்த மனிதருக்கு மீண்டும் நன்றி சொன்னோம். குழந்தைகள் மிக மகிழ்ந்தார்கள். அதில் எங்களுக்கும் ஒரு அல்ப சந்தோஷம்.

இது போன்றதொரு நிகழ்வுக்கு கண்ணாடிகளை ஒரு வாரம் முன்பிருந்தே கோளரங்கத்தில் விற்று இருக்கலாம் (அ) எந்த இடங்களில் கிடைக்கும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கலாம். கடைசி நிமிடத்தில் கண்ணாடி கிடைக்காது எத்தனை குழந்தைகள் வருத்தம் அடைந்திருப்பர்? கோளரங்கத்தில் இருந்த கூட்டம் மிக சொற்பமே!!!! அதற்கே கண்ணாடிகள் இல்லை என்றால்....

Monday, July 20, 2009

நாளையும் மற்றொரு நாளே

எங்கோ மணி அடிப்பது போல் தோன்றியது. அது அவளுக்கானது என்று புரிய சில விநாடிகள் ஆனது. இன்னும் கொஞ்சம் தூங்குவோமா என்ற எண்ணத்தை ஒதுக்கி விட்டு எழுந்த பொழுது மணி காலை 5:05. இலேசாகத் தொண்டையில் கசப்புணர்வும் ஓங்களிப்பும் வயிற்றில் சிசு "நானிருக்கிறேன் அம்மா" என்றது. மெல்ல எழுந்து குளியலறைக்குள் சென்றாள். குளியல் முடிந்து வரும் பொழுது மணி 5:30 என்றது. இனி, நூல் பிடித்தாற்போல் சரியாக வேலையை முடிக்காவிட்டால் பஸ் போய்விடும். கணவன் எந்த வித சலனமும் இன்றி உறங்கிக் கொண்டிருந்தான்.

மெல்ல கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தாள். மாமனாரும், மாமியாரும் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வாசற்கதவைத் திறந்து, கேட்டில் மில்க் பாக்ஸில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து வந்து சமையலறைக்குள் நுழைந்தாள். பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை சின்ன தீயில் எரிய விட்டாள். அம்மா வாங்கித் தந்த பால் குக்கர் பரணில் இருக்கிறது. "அது என்ன உய்ய்-னு சத்தம் கொடுத்துட்டு... பக்கத்தில் இருந்து பாத்துக்கறதை விட பொம்பளைக்கு என்ன வேலை", என்பது மாமியாரின் கொள்கை. அவள் வீட்டில் அம்மா பாலை குக்கரில் வைத்துவிட்டு மற்ற வேலைகளைக் கவனிப்பாள். சத்தம் வரும்பொழுது அம்மா/அப்பா/அவள் அடுப்பை அணைத்துவிட்டு காபி போடுவார்கள். வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் , ஊருக்கு சென்ற ஒரு நாள் , கண்ணயர்ந்தவளை பால் குக்கர் விசில் எழுப்பியதில் இருந்து இவள் செல்லும் பொழுதெல்லாம் அம்மா பால் குக்கர் வைப்பதில்லை; அடுப்பருகில் நின்று பாலைக் காய்ச்சுவாள். மெல்ல கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

வாசல் பெருக்கி, தெளித்து சின்னதாகக் கோலமிட்டாள். இது அவளாக விரும்பி ஏற்றுக் கொண்ட வேலை. புள்ளி வைத்தோ வைக்காமலோ, அழகான ஒரு கோலமிட்டு முடிக்கும் பொழுது அம்மாவுடன் இருக்கும் ஒரு அமைதி வரும். விடுதியில் இருந்த பொழுது கூட அந்த சின்ன கோயிலின் முன் அவள் தினமும் கோலமிடுவாள்.

சற்றே தலை சுற்றுவது போல் இருந்தது. கதவைப் பிடித்து நிதானித்து விட்டு உள்ளே வந்தாள். பாலில் ஆடை விழுந்திருந்தது. குக்கரில் பருப்பை வேகப் போட்டுவிட்டு, பாலை கொதிக்க விட்டு இறக்கி வைத்தாள். பாலை கோப்பையில் ஊற்றியவாறு என்ன காய் வைக்கலாம் என்று யோசித்தாள். நேற்று அம்மா வந்து சமைத்து கொடுத்த உணவின் ருசியும் மணமும் நினைவுக்கு வந்தது. கேரட்டை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து உணவு மேசையில் வைத்துவிட்டு, அவளும் அமர்ந்து பாலருந்தினாள். மெல்ல ஒரு ஆயாசம் ஏற்பட்டது. ஞாயிறன்று அவள் வீட்டில் அப்பா சமைப்பார். அம்மாவுக்கு அதுவே மற்ற நாட்களில் ஆயாசம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மற்ற நாட்களும் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்.

இன்று ரொம்ப யோசிக்கிறேன் என்று எண்ணியவாறு சமையல் அறைக்குள் நுழைந்தாள். பருப்பு , இரசம், கேரட் பொரியல், இட்லி, வெங்காய சட்னி என்ற ஓட்டத்துடன் நடுவில் மாமியார், மாமனாருக்கு காபி கொடுத்துவிட்டு , உணவை கட்டிவிட்டு, நிமிர்ந்த பொழுது மணி 6:50. மட மட என உடை மாற்றிவிட்டு, அப்பொழுது தான் எழுந்த கணவனுக்கு காபியை வைத்துவிட்டு வெளியேறினாள். வந்து இரண்டு நிமிடத்தில் பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளை 8:30 மணிக்கு அலுவலகத்தில் ரம்யா எழுப்பி விட்டாள். இந்த 1.30 மணி நேரமாவது ஓய்வாகிறதே, எத்தனை பேருக்கு இது கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அவள் வேலையிடத்தை நோக்கி நடந்தாள்.

இப்பொழுது அவளுக்கான வேலைகளை இன்னும் சிரத்தையுடன் இருக்க வேண்டும். அவள் கருவுற்றிருப்பதை அறிந்தவுடன் அவளது லீட் சொன்னது, "நல்ல விஷயம். ஆனால் இதனால் அடிக்கடி விடுப்பு எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்", என்பது தான். "நீ மெடர்னிட்டி லீவ் எடுத்தாலே ரேட்டிங் உதைக்கும். ஒரு சைக்கிள் நம்ம ப்ரமோஷன் கோவிந்தா தான். இப்பவே கொஞ்சம் ஓவரா தான் உன்னை மானிட்டர் பண்ணுவாங்க..." என்றனர் தோழியர். வேலைப் பளுவில் உணவுவேளை வந்துவிட்டது.


"மீனா டீ டைம்ல எங்க வீட்டுக்கா போன? "
"ம். குட்டிப்பயன் மோஷன் போய்விட்டான். போன் வந்தது. அதான் போய்ட்டு வந்தேன்"
'அடப்பாவி. ஏன் வீட்ல இருக்கிறவங்க செய்ய மாட்டாங்களாமா?"
"வேலைக்கும் ஆள் போடக் கூடாதாம். இதுக்கும் நான் தான் ஓடணுமாம்."
"நீ ஒரு நாள் போகாமல் இரு. எல்லாம் சரியா தான் இருக்கும்"
"மீட்டிங் இருக்குனு சொல்லிட்டு ஒரு நாள் 2 மணி நேரம் கழிச்சி போனேன். அப்படியே தான் இருந்தான்",
என்றவளின் கண்களில் நீர்.
இத்தனைக்கும் இது காதல் திருமணம். பெற்றோர் காதலை ஒத்துக்கொண்டதால், இனி அவர்கள் சொல்படி மட்டுமே கேட்பதாக உறுதி எடுத்துக் கொண்ட கணவன் எதிலும் தலை இடுவதில்லை. ஆயிரங்கள் சம்பாதித்தாலும் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள முடியாது; மாதாமாதம் சம்பளம் அவர்களிடம் போய் , கணக்கு சொல்லி தான் காசு பெற்றுக்கொள்ள முடியும். குழந்தைக்கு அழகாக ஒரு சட்டை கூட அவளால் எடுக்க முடியாது.

"எல்லா காசும் அவங்களுக்கு தான் கொடுக்கற. பேசாமல் வேலைக்கு போக முடியாதுனு சொல்லிடு"
"ஒரு 8 மணி நேரமாவது நான் நிம்மதியா இருக்கலாம்னு பார்க்கிறேன்",
வருத்தம் நிறைந்த சிரிப்புடன் மீனா கூறினாள்.

தான் கூட இப்படித் தான் இப்பொழுதெல்லாம் நினைப்பதாகத் தோன்றியது. ஏன் இதில் இருந்து வெளி வர முடிவதில்லை. முடியாது என்றால் என்ன ஆகும்? கங்காவிற்கு நடந்தது போல் ஆகுமா? அம்மா, அப்பா அழைக்கப்படுவார்கள். பஞ்சாயத்து நடக்கும். இசைவாக இல்லாவிட்டால் அவளை அழைத்துச் செல்லலாம் என்பார்கள். அவர்கள் வீட்டில் தானே இருக்கிறாள்? அவளால் அவள் பெற்றோர் சலனப்படுவதைக் காண முடியாது. அவளைக் கண்டு இருவரும் மருகிவிட மாட்டார்களா?


"நீ ஆபீஸ் பக்கத்தில் வீடு பார்க்கணும்", என்ற ஜெனியைப் பார்த்து புன்னகைத்தாள். ஜெனிபர் அவள் திருமணத்தின் பொழுதே தெளிவாகப் பேசி அலுவலகம் அருகிலேயே வீடு பார்த்து இருக்கிறாள். "பெண்களுக்கு இருக்கும் சுமைகளுக்கு வீடு அருகில் இருப்பது நலம்", என்பது அவள் எண்ணம். அவள் சொல்வதின் நியாயங்களைப் புரிந்து கொள்ளும் கணவன். என் கணவர் வீட்டு விஷயங்களில் தலையிடுவதே இல்லை என்று கூறாமல் மழுப்பலாக சிரித்தாள்.

"வீட்டு வேலைக்காவது ஆள் இருக்கா?", ஜெனி
"வீடு பெருக்குவதற்கு மட்டும் வேலைக்கு ஆள் இருக்கு", என்றாள். "பாத்திரம் கழுவறது எல்லாம் ஒரு வேலையா. வேலைக்காரங்க அதெல்லாம் ஒழுங்கா செய்ய மாட்டாங்க. வீட்டுக்குள்ள வேலைக்கு ஆள் வச்சிருக்கிறதே பெரிசு", அவள் மாமியாரின் கொள்கை.

"உனக்கு இப்படி. எங்க வீட்டு பக்கத்தில ஒரு ஆண்ட்டி எங்கம்மாட்ட அழறாங்க. மருமகள் எல்லா வேலையும் அவங்கள பார்க்கச் சொல்றாளாம். இருபத்திஐயாயிரம் வீட்டு வாடகை கொடுக்கறவங்க ஆயிரம் ரூபாய் கொடுத்து வேலைக்கு ஆள் வச்சிக்க மாட்டாங்களாம். மொத்ததில பொண்ணா பிறந்தா ஒண்ணு மருமகளா கஷ்டப்படணும் இல்ல மாமியாரா கஷ்டப்படணும் போல", என்றாள் ஜெனிபர்.

"வீணா பத்தி கேள்விப்பட்டியா?" என்றாள் ரம்யா. வீணாவிற்கு அவளைவிட குறைவாக சம்பாதிக்கும் பையன் தான் பார்த்தார்கள். திருமணத்திற்குப் பின் தாழ்வு மனப்பான்மை வந்தால் என்று அவள் யோசித்த பொழுது, ராஜி தான் கூறினாள், "அது பத்தி அவர்கிட்ட பேசிட்டு நீ முடிவு எடு. அது மாதிரி நான் யோசிச்சிருந்தால் எனக்கு ஒரு அழகான குடும்பம் மிஸ் ஆகி இருக்கும்", என்றாள். ராஜி வீட்டில் அவள் கணவர், மாமனார், மாமியார் எல்லோரும் அன்பைப் பொழிபவர்கள். எல்லோரும் எல்லா வேலைகளும் பகிர்ந்து செய்யும் ஓர் அழகான குடும்பம். எல்லோருக்கும் அப்படி அமைவது இல்லையே!!!

"நாலு வருஷம் ஆகிடுச்சு. இப்ப என்னனு தெரியல, வீணா வேலையை விடாட்டி, பிரிச்சிடலாம்னு அவங்க மாமியார் சொல்றாங்களாம். அவரும் சரிங்கறாராம். கையில குழந்தையை வச்சிகிட்டு எப்படி யோசிக்கறாங்கனு புரியலை. என்ன பண்றதுனு கேட்டாள். என்ன சொல்ல முடியும்? சினிமால வர்ற மாதிரி விட்டுடுனு சொல்றது சுலபமா இல்லை. அவள் தான் அவள் வாழ்க்கையை வாழணும்".

படித்து வேலையில் இருப்பதால் மட்டும் பெண்ணுக்குப் பிரச்னைகள் குறைந்து விடுகிறதா? இரட்டைச் சவாரியில் தனித்து போராட வேண்டி உள்ளது. அவள் தீராத பிரச்னையால் தனிமைப் படுத்தப்பட்டால் படிப்பும் வேலையும் நிச்சயம் உதவும். அன்றாடப் பிரச்னைகள் என்றால் ஒட்டவும் முடியாது உதறவும் முடியாது தவிக்க வேண்டும். சமைக்க முடியாது என்று ஒரு நாளேனும் உரிமைக் குரல் தன்னால் எழுப்ப முடியுமா என்று தெரியவில்லை.

சற்று நேரம் மெளனமாக உணவு முடிந்தது. வீணாவின் பிரச்னையின் தாக்கத்தில் எல்லோரும் அமைதியாக இருந்தனர். வீணா என்ன செய்வாள் என்ற எண்ணம் வேலைப்பளுவிலும் நான்கைந்து முறை வந்த மசக்கை வாந்தியிலும் அமிழ்ந்து போனது. வீட்டிற்கு கிளம்பும் நேரம் வந்த பொழுது மனமும் உடலும் சோர்வாக இருந்தது.மீண்டும் பேருந்தில் ஏறி வீடு போக எட்டு மணி ஆகும். இவள் வருகைக்காக வீடு காத்திருக்கும். இரவு உணவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாக வேண்டும். பின் பாத்திரங்கள் கழுவி, அடுப்படி ஒதுக்க வேண்டும். ஐந்து மணிக்கு அலாரம் வைத்து படுக்கும் பொழுது கடிகார முள் பதினொன்றை நெருங்கி விடும். இப்பொழுது வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் சேர்த்து அவளே கவனித்துக் கொள்ள வேண்டும்.

நாளை பிள்ளை வந்த பின்னும் எதுவும் மாறாதோ என்று தோன்றியது. வேலைக்கு செல்லாது இருந்தாலாவது அம்மா வீட்டிற்கு சில நாட்கள் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஞாயிறு என்றால் அம்மா வருவாள் என்ற மாற்றம் தவிர "நாளையும் மற்றொரு நாளே" என்று தோன்றியது. அடுத்த சில மணித்துளிகளாவது சற்று நிம்மதியுடன் இருப்போம் என்று பஸ் இருக்கையில் அமர்ந்து கண் அயர்ந்தாள்.


பி.கு: இது உண்மை சம்பவங்களின் தொகுப்பே!!!

Thursday, July 16, 2009

பனி உலகமும் மீன் உலகமும்

யாழினிக்குப் பனி இருக்கும் இடம் செல்ல வேண்டும் என்று ஆசை. ஸ்விட்சலாந்துக்கெல்லாம் அழைத்துச் செல்ல முடியாது என்று சென்னை "அபிராமி மால்" பனியுலகம் சென்றோம் (2 வாரம் ஆகிவிட்டது. லேட்டான பதிவு கல்லிருந்தால் ... என்ற பழமொழி போல, இணைய இணைப்பு இருந்தால் நேரம் இல்லை, நேரம் கிடைத்தால் இணைய இணைப்பு இல்லை...). நீங்கள் மால் உள்ளே நுழையக் கட்டணம் கிடையாது. திரையரங்குகளுக்கு சென்று சினிமா பார்க்கலாம் (டிக்கட் வாங்கிட்டுதான்) அல்லது "பனியுலகம்", "மீன் உலகம்", "கிஸ்ஸிங் கார்ஸ்", "குட்டீஸ் உலகம்" எல்லாம் டிக்கட் வாங்கி செல்லலாம். எல்லா உலகுக்கும் சேர்த்து 250ரூ கோம்போ பாக்கேஜ் உண்டு. இல்லையெனில் முறையே 150, 20, 40, 50 என்று நுழைவுக்கட்டணம். இது போக "விண்டோ ஷாப்பிங்" பண்ண கடைகள் உண்டு. கார் பார்க்கிங் தான் பிரச்னை. நாங்கள் சனி காலை சென்றதால் கொஞ்சம் தப்பித்தோம். உணவுக்கு ஃபுட் கோர்ட்டும் உள்ளது.

முதலில் 150ரூ கொடுத்து பனியுலகம் சென்றோம். ஜெர்கின், காலணி, கையுறை, பாஸ்போர்ட் எல்லாம் கொடுக்கிறார்கள். இந்த பாஸ்போர்ட்டில் அடுத்த முறை நம்மை வரவழைக்க சில தள்ளுபடிகள் உண்டு. உள்ளே ஒரு பெரிய பனி சறுக்கு இருந்தது. பனிபொம்மைகள் செய்து பார்த்தோம், பின் பனியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண்டோம். சில்லென்று பனி விளையாட்டு அருமையாக இருந்தது. கொஞ்சம் குளிராக இருந்தால் "இக்ளூ"வுக்குள் சென்றோம். சின்ன "ஸ்லெட்ஜ்" இருந்தது. குட்டீஸை வைத்து அதில் இழுக்க அவர்களுக்கு ஜாலிதான். மொத்த 20 நிமிடத்தில் கடைசி ஓரிரு நிமிடம் இடி, மின்னல் காற்று வந்து சிலிர்க்க வைத்தது."ஸ்விட்சர்லாந்து மாதிரியே இருக்கும்மா" என்று குட்டீஸ் கூறி (ஏதோ ஸ்விட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தாற்போல்...) லூட்டி அடித்தார்கள். அந்த பனிமழையை விட அவர்களது மகிழ்ச்சி சில்லென்று மனதுள் இறங்கியது.

அடுத்து மீன் உலகம். பனி உலகம் சென்றதால் 15ரூ நுழைவுக் கட்டணம். சின்ன அளவுதான் என்றாலும் அங்கிருந்த பெண் கொடுத்த விளக்கங்கள் அருமை. மெல்ல மெல்ல நட்சத்திர மீன் ஊர்ந்தது.




ஃப்ளவர் ஹார்ன், கையைக் காட்டிய இடமெல்லாம் வந்தது. கெள ஃபிஷ் மாடு போன்ற கொம்புடன் இருந்தது.



நீமோ ஸீ அனிமோனுடன் இழைந்து விளையாடிக் கொண்டிருந்தது. உயிருடன் மீனை "ஸீ அனிமோனுக்கு" உணவாக இட, அது அப்படியே குவிந்து அதன் இரத்தத்தை உரிஞ்சி விட்டது. நீமோ மிஞ்சிய உடம்பை உண்டது.




நீமோவுக்கு செதில்கள் இல்லாத்தால் ஸீ அனிமோன் ஒன்றும் செய்யாதாம்.



அப்புறம் இறால்களுக்கு உணவிட்டார். அட!!! எட்டுக்கால் பூச்சி ஓடுவது போல் இருந்தது. பத்து இறால் சேர்ந்தால், நீந்திக் கொண்டிருக்கும் மீனை வேட்டை ஆடிவிடுமாம்.

"பிரான்ஹா" மீனின் பல்லைப் பிடுங்கி மீன்தொட்டியில் போட்டிருந்தார்கள். பல்லிருந்தால் தொட்டியை உடைத்து விடுமாம். பத்து மீன்கள் சேர்ந்தால் ஒரு ஆளையே கொன்றுவிடுமாம். அம்மாடியோவ்!!! சின்னதா இருக்கே என்ற சலிப்புடன் நுழைந்த்வர்கள் மீன் பற்றி தகவல்கள் தெரிந்த பிரமிப்புடன் வெளியே வந்தோம்.



அப்புறம் "கிஸ்ஸிங் கார்ஸ்", "குட்டீஸ் உலகம்". குட்டீஸ் உலகம் ஏழு வயதுக்குட்பட்டவர்களுக்குரிய விளையாட்டுக்களுடன் இருந்தது. நந்தினிக்கு வாங்கிய டிக்கட் வேஸ்ட். "கிஸ்ஸிங் கார்ஸ்" வழக்கமான கார் மோதல் தான்.


ஓரிடத்தில் மெகந்தி, டாட்டூ, போர்ட்ரெய்ட் எல்லாம் இருந்தது. அறுபது ரூபாய் கொடுத்து ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்தோம். "நாமே இதை பெயிண்ட் பண்ணலாம்" என்று நான் வாய் விட, மறுநாள் ஒரு மணிநேரப் பொழுது யாழினிக்கும் நந்தினிக்கும் என் கையில் அந்த வாக்கை சரி பார்க்க உதவியது :-)



யாழின் கைவண்ணம்



நந்துவின் கைவண்ணம்

Wednesday, July 1, 2009

என்னோட ராசி என்ன ராசி?

காலையில் வானொலியில் இராசி பலன் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனாலோ என்னவோ நந்தினி வந்து அவள் இராசி என்ன என்று கேட்டாள். எங்க வீட்டு இராசி பலன் காமெடி:

நந்தினி : நான் என்ன இராசி?
நான் : லியோ
நந்தினி : அப்படீனா?
நான் : சிங்கம்
நந்தினி: உர்.... நான் சிங்கம்.
நான்: தமிழ்ல வேற இராசி வரும். தராசுனு நினைக்கிறேன்
நந்தினி: தராசுனா என்ன மிருகம்?
நான்: ???

யாழினி: நான் என்ன இராசி?
நான்: ஏரிஸ் - ஆடு
யாழினி : ஓ!! (சற்று யோசித்து) அதான் அம்மா.. நான் பேசும்பொழுது எல்லாம் "மே மே" னு சத்தம் வருதுமா...
நான்: ??? (விவேக்கோட காக்கா பிரியாணி காமெடி நினைவுக்கு வந்தது)

இதில் சிங்கம் ஆட்டை வெல்லும் என்று வேறு ஒரு சண்டை. நான் சொன்னேன் "இது மலை ஆடு, சிங்கத்துக்கு ஈடு கொடுத்து சண்டை போடும் தெரியுமா?". வேற என்ன சொல்ல, இரண்டு பேரும் சமம் என்று சொல்லணும் இல்லையா?

Monday, June 29, 2009

காரணங்கள் தேவையில்லை

குதித்து குதூகலிக்க
மகிழ்ந்து சிரிக்க
மனம் காரணங்கள்
தேடி அலையும்...

ஏக்கம் கொள்ளவும்
கோபம் கொள்ளவும்
உடன் கிடைக்கின்றன
மனதிற்குக் காரணங்கள்!!!

யோசித்ததில்லை நான்
ஏன் இந்த முரண் என்று...

கொய்த மலரை எனக்களித்து
காரணங்கள் ஏதுமின்றி
கட்டி அணைத்து மகிழ்ந்தாள்
செல்ல மகள்

மதிய உணவு எளிதாக
தயிர் சாதம் வைத்தனுப்ப
மகிழ்ந்து முத்தமிட்டாள்
எனதருமை மகள்

சின்ன சின்ன விஷயங்களில்
சிரித்திருக்க கற்றேன்
மனம் மகிழ்ந்திருக்க
இனி...
காரணங்கள் தேவையில்லை!!!